பாகிஸ்தான் ஜிந்தாபாத்- முழக்கம் எழுப்பிய அமுல்யாவை படுகொலை செய்தால் ரூ10 லட்சம் பரிசு- ஶ்ரீராம் சேனா
பெங்களூரு: பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பிய பெங்களூரு மாணவி அமுல்யாவை படுகொலை செய்தால் ரூ10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஶ்ரீராம் சேனா அறிவித்துள்ளது.
Recommended Video
பெங்களூருவில் அண்மையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில் மஜ்லிஸ் கட்சி எம்.பி. ஓவைசி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளம் பெண் அமுல்யா திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பினார். இதனால் பெரும் சர்ச்சையானது. பின்னர் போலீசார் அமுல்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது தேசதுரோக வழக்கும் பாய்ந்துள்ளது. அமுல்யாவுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்கிறது என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார். அமுல்யாவின் பின்னணி குறித்தும் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே அமுல்யாவுக்கு ஆதரவு தெரிவித்த தோழி ஆர்திரா நாராயணனையும் போலீசார் கைது செய்தனர். மக்களிடையே மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி இருந்ததற்காக அவர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அமுல்யாவை படுகொலை செய்தால் ரூ10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஶ்ரீராம் சேனா என்ற இந்துத்துவா அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஶ்ரீராம் சேனாவை சேர்ந்த சஞ்சீவ் மராதி வீடியோ பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கம் எழுப்பிய அமுல்யாவை மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் விடுதலை செய்துவிடக் கூடாது. அப்படி அந்த பெண்ணை விடுதலை செய்தால் நாங்கள் படுகொலை செய்வோம்.
அமுல்யாவை படுகொலை செய்பவர்களுக்கு ஶ்ரீராம் சேனா சார்பாக ரூ10 லட்சம் பரிசுத் தொகை வழங்குவோம். இவ்வாறு சஞ்சீவ் மராதி கூறினார்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி சிகே பாபா கூறுகையில், இதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இது குறித்து விசாரணை நடத்துவோம் என்றார்.