பில்லா ஸ்டைல் அட்டாக்.. சென்னையிலிருந்து எஸ் ஆன இலங்கை தாதா அங்கொட.. பெங்களூரில் படுகொலை!
பெங்களூரு: பெங்களூருவில் இலங்கை தாதா அங்கொட லொக்கா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் நிழல் உலக தாதாவாக வலம் வந்தவர் அங்கொட லொக்கா. அங்கொட லொக்காவுக்கு மற்றொரு நிழல் உலக தாதா சமயங் கோஷ்டிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.
2017-ல் களுத்துறை வடக்கு பகுதியில் சிறைச்சாலை வாகனம் மீது அங்கொட கேங் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சமயங் கோஷ்டியை சேர்ந்த 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் அங்கொட தஞ்சம்
இந்த வழக்கில் தேடப்பட்ட அங்கொட லொக்கா, இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார். சென்னையில் ஏற்கனவே பதுங்கி இருக்கும் இலங்கை நிழல் உலக தாதா, கிம்புலாஎல குணாவிடம் அங்கொட லொக்கா அடைக்கலாமானார். ஆனால் இலங்கை அரசு தந்த தகவலின் பேரில் சென்னையிலேயே 2 முறை அங்கொட லொக்கா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பெங்களூருவுக்கு எஸ்கேப்
பின்னர் ஜாமீனில் வெளியேவந்த அங்கொட லொக்கா பெங்களூருவுக்கு தப்பி ஓடி மருத்துவமனையில் தஞ்சம் அடைந்திருந்தார். இந்த நிலையில்தான் ஜூலை 3-ந் தேதி அங்கொட லொக்கா இறந்துவிட்டதாக இலங்கை அரசுக்கு தகவல்கள் கிடைத்தன.
பில்லா பாணியில் விஷம் கொடுத்த பெண்
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், அங்கொட லொக்காவின் கூட்டாளியாக இருந்தவரின் மனைவி ஒருவரே இந்த கொலையை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தமது கணவரை கொன்ற அங்கொட லொக்காவை பழிவாங்க அவரிடம் நெருங்கிப் பழகுவது போல் நடித்து மதுவில் விஷம் கலந்து கொலை செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பில்லா படத்தில் ரஜினியால் கொல்லப்பட்ட கூட்டாளியின் சகோதரி ஶ்ரீபிரியா, ரஜினியை கொல்ல துடிதுடிப்பார். அதே பாணியில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பெங்களூர் மற்றும் கொழும்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் விசாரணை
இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூடுதல் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் இலங்கை துணை தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.