கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா.. கலக்கத்தில் மாணவர்கள்
பெங்களூர்: கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவருடன் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கர்நாடகத்தில் 11,005 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போது மருத்துவமனையில் 3909 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6,916 பேர் சிகிச்சை பெற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளார்கள். இதுவரை 180 பேர் பலியாகிவிட்டனர்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மாநில அரசு செய்துவருகிறது. அதாவது வெளிமாநில ஆட்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது உள்ளிட்டவற்றை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது எடியூரப்பா அரசு.
இங்கு எஸ்எஸ்எல்சி தேர்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில் ஹாசன் மாவட்டத்தில் அர்கால்குட் தாலுக்காவில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவனுக்கு இன்று கொரோனா உறுதியானது. அது போல் வெள்ளிக்கிழமை தும்குரு மாவட்டத்தில் பாவகாடாவில் உள்ள பள்ளியில் தேர்வு பணிக்காக சென்ற அரசு அதிகாரிக்கு கொரோனா உறுதியானது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹாசன் மாவட்டத்தில் அர்கால்குட் நகரில் 16 வயது சிறுவன் கணித தேர்வை எழுதினார். அவர் அண்மையில் டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் கொரோனா சோதனை எடுக்கப்பட்டது என்றார்.