கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த எதிர்ப்பு- தடை விதிக்குமா உச்சநீதிமன்றம்?
பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் முதல்வராக இருந்த குமாரசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
இந்த 17 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார். இதனடிப்படையில் 2023-ம் ஆண்டு வரை இந்த 17 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆனால் சபாநாயகரின் தகுதி நீக்க முடிவை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ள விசாரணையில் இந்த விவகாரம் சுட்டி காட்டப்பட இருக்கிறது. இதனால் கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.