உச்சநீதிமன்ற தீர்ப்பால் அரசியல் சாசனத்திற்கு அவமானம்.. கர்நாடக சட்டசபையில் காங். எம்எல்ஏக்கள் ஆவேசம்
பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவால் சபாநாயகரின் அதிகாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஹெச்.கே.பாட்டீல் ஆவேசமாக உரையாற்றினார்.
15 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று வழங்கிய தீர்ப்பில், எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் கூடிய விரைவில் முடிவெடுக்க வேண்டும். அதேநேரம், அவர்கள் சட்டசபைக்கு வர யாரும் கட்டாயப்படுத்த கூடாது என கூறியிருந்தது.
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, இதுகுறித்து, காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா பாயின்ட் ஆப் ஆர்டர் இருப்பதாக குறிப்பிட்டு, பேசினார். மேலும் மூத்த தலைவரான ஹெச்.கே.பாட்டில் இதே பிரச்சினை கிளப்பினார். அப்போது, ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:
சித்தராமையா 'பாயின்ட் ஆப் ஆர்டர்' பிரச்சினை எழுப்பியது சரிதான். அரசியல் கட்சிகளுக்கு உள்ள விப் அதிகாரத்தை பறித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியானது இல்லை. அரசியல் சாசனத்தில் 10வது அட்டவணையில் விப் அதிகாரம் வழங்கப்பட்டது. இப்போது பறிக்கப்பட்டுள்ளது. விப் பற்றி உச்சநீதிமன்றத்தில் யாருமே பிரச்சினை கிளப்பாத போதும் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், அரசியல் சாசனத்திற்கு அவமானம் இழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஹெச்.கே.பாட்டீல் பேசினார். மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்களும் இதே விவகாரத்தை வலியுறுத்தினர்.
சட்டசபை அதிகாரம் பறிக்கப்படுவதால், உச்சநீதிமன்றத்தில் இதுபற்றி வழக்கு தொடர வேண்டும், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இன்னும் உறுப்பினர்களா இல்லையா என்பது முடிவு செய்யப்பட வேண்டும். அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்பது காங்கிரஸ் வாதமாக இருக்கிறது. கிருஷ்ணபைரேகவுடா உள்ளிட்ட காங்கிரஸை சேர்ந்த அமைச்சர்களும் இவ்வாறு பேசினர்.