எடியூரப்பா விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டும்.. கர்நாடகாவில், தமிழ் சங்கம் சார்பில் யாகம்
பெங்களூர்: கொரோனா வைரஸ் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நலம் பெற வேண்டும் என்று கர்நாடக மாநிலம் ஷிமோகா தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கர்நாடகாவில் நாளுக்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம் தினசரி பாதிப்புகளில், தமிழகத்தை விட அதிகமான அளவுக்கு கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.
இந்த நிலையில்தான், முதல்வர் எடியூரப்பா, அவரது மகள் உள்ளிட்டோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, எடியூரப்பா பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்தபடியும் அவர் அரசு அலுவல்களை பார்த்தபடி இருக்கிறார்.
இதேபோல, முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான சித்தராமையாவுக்கு கொரோனா உறுதியான நிலையில், அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி
குணமடைய வழிபாடு
இந்த நிலையில், எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிமோகாவிலுள்ள 'தமிழ்த் தாய் சங்கத்தின்' சார்பில், எடியூரப்பா விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஷிமோகாவில் உள்ள விநாயகர் கோவிலில், ஹோமம் நடத்தி, எடியூரப்பா விரைவில் குணமாக வேண்டும் என்று வழிபட்டனர் தமிழ் சங்கத்தினர்.
தமிழர்கள் அதிகம்
இதில், ஷிமோகா தமிழ்த் தாய் சங்கத்தின் தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் மஞ்சுநாத், செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் வெங்கடேஷ், இளைஞர் தமிழ்ச் சங்க தலைவர் எம்.பி.கணேஷ், தமிழ் நற்பணி மன்றம் தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ஷிமோகா மாவட்டத்தின் பத்ராவதி பகுதியில் தமிழர்கள் பல தலைமுறைகளாக கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். எனவே பெங்களூர், மைசூர், மங்களூர் போலவே, ஷிமோகாவிலும் தமிழ்ச் சங்கம் செயல்படுகிறது.
தனிப்பட்ட உதவிகள்
ஷிமோகா தமிழ் சங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டங்களிலும், அல்லது முதல்வராக இருக்கும் காலகட்டத்திலும், எடியூரப்பா தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகள் செய்துள்ளார். சங்கத்தின் நிகழ்வுகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனவே, ஷிமோகா மாவட்டத்திலுள்ள தமிழர்களுக்கும், எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது.
கர்நாடக தமிழர்கள்
இதேபோல பெங்களூர் நகரில், பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த, திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க, எடியூரப்பா முக்கிய பங்காற்றினார். எனவே கர்நாடக தமிழர்களிடம் எடியூரப்பா மீது மரியாதை இருக்கிறது. அதை வெளிக்காட்டும் விதமாக, எடியூரப்பா விரைவில் குணமடைய தமிழ் அமைப்புகள் வழிபாடுகள் நடத்தி வருகின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய, தமிழ்ச் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.பி.சம்பத், "தமிழ் அமைப்புகளுக்கு எடியூரப்பா நிறைய உதவிகள் செய்துள்ளார். அவருக்கான நன்றிக் கடனாக இதை பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.