தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது... வாட்டாள் நாகராஜ் திமிர் பேச்சு
Recommended Video
பெங்களூர்: மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது என்று கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேகதாது விவகாரத்தில், தமிழகத்தை ஆலோசிக்காமல், முடிவு எடுக்கப்படாது என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தமிழக அரசு எதிர்ப்பு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், 5,912 கோடி ரூபாய் செலவில், 66 டி.எம்.சி., கொள்ளளவு உடைய, புதிய அணை கட்ட கர்நாடகா அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரம் சட்டப் போராட்டமும் நடந்து வருகிறது.
வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
இந்தநிலையில், மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது என்று கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
குற்றச்சாட்டு
இதற்கிடையே, கர்நாடக எல்லையான அத்திபள்ளியில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், மேகதாது விவகாரத்தில், தமிழக முதல்வர் பழனிசாமியும், திமுக தலைவர் மு. க. ஸ்டாலினும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
அடிக்கல் நாட்டுவோம்
தமிழர்கள் கன்னியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக அரசு அணைகட்டும் பணியை தொடங்கவில்லை என்றால், வரும் 27ம் தேதி தாங்களே அடிக்கல் நாட்டுவோம் என்று எச்சரித்தார்.