தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி-பெங்களூருவில் 3 தீவிரவாதிகளை கைது செய்த தமிழக போலீஸ்
பெங்களூரு: தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்த 3 தீவிரவாதிகள் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகியோரை சுற்றி வளைத்து தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இம்மூவரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களை காவலில் எடுத்து கியூ பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளனர். இந்து முன்னணி பிரமுகர் கொலையில் தொடர்புடைய தீவிரவாதி வெளிநாடு செல்ல இம்மூவரும் உதவி இருக்கின்றனர் என்கிறது கியூ பிரிவு போலீஸ்.
மேலும் தீவிரவாதிகளுக்கு சிம் கார்டுகளை 3 பேரும் வாங்கிக் கொடுத்தனர் என்பதும் கியூ பிரிவு போலீசாரின் குற்றச்சாட்டு. இம்மூவரும் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு ஆயுதங்களுடன் பெங்களூருவில் பதுங்கி இருந்தனர் என கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இந்த தீவிரவாதிகளுடன் வேறு யாருக்கு தொடர்பு இருந்தது என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.