கர்நாடகாவின் திடீர் முடிவால் குழப்பம்.. திருப்பியனுப்பப்படும் தமிழக வாகனங்கள்.. குமுறும் மக்கள்
பெங்களூர்: இ-பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த வாகனங்கள் என்றால் கர்நாடகாவிற்கு அனுமதிக்க முடியாது என்று அந்த மாநில அரசு திடீரென எடுத்த முடிவு நிறைய பேருக்கு பெரும் அலைச்சல், பொருட்செலவு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் நிறுவனங்களை தொடங்குவதற்கு அனுமதி கொடுத்து விட்டு. மறுபக்கம் அதில் பணியாற்றுவதற்கு ஊழியர்கள் வரும்போது அவர்களை தடுத்து நிறுத்தி அனுப்பி வைப்பது என்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவிலேயே முதலாவதாக, லாக்டவுனை தளர்த்த வேண்டும்.. பொருளாதார நடவடிக்கு முக்கியம் என்று குரல் கொடுத்த முதல்வர்களில் ஒருவர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. அதிலும், பெங்களூர் போன்ற நகரங்களில் கணிசமான ஊழியர்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதுவும் தமிழர்கள்.
இ பாஸ் வைத்திருந்தாலும் தமிழக வாகனங்கள் கர்நாடகா எல்லையில் தடுத்து நிறுத்தம்.. பொதுமக்கள் தவிப்பு
ஐடி நிறுவனங்கள்
இப்போது லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் இருந்தாலும் பெங்களூரில், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் சிக்கிக்கொண்டு இருந்த கர்நாடகாவில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் இ-பாஸ் வாங்கிக்கொண்டு பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு வந்தனர்.
தனிமைப்படுத்துதல்
ஆனால், ஓசூர்-கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளி பகுதியில், கர்நாடக காவல்துறை அவர்களை வழிமறித்து, "நேரடியாக உங்களால் உங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது" என்று தடாலடியாக கூறியது. ஏன், எதற்கு என்று கேட்டபோது, வீட்டுக்கு அனுப்பினால் தனிமைப் படுத்திக் கொண்டு அங்கேயே 14 நாட்கள் இருப்பீர்கள் என்பதற்கு உத்தரவாதமும் கிடையாது. எனவே நாங்கள் ஏற்பாடு செய்துள்ள ஓட்டல் அறைகள், கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் 14 நாட்கள் நீங்கள் தனிமைப் படுத்திக் கொண்டு தங்கிக் கொள்ள விருப்பமிருந்தால் பெங்களூர் எல்லைக்குள் வரவும். அப்படி இல்லாவிட்டால் திரும்பிச் சென்றுவிடுங்கள் என்று தெரிவித்துவிட்டனர். தங்குவதற்கான செலவையும் சம்பந்தப்பட்ட நபர்கள் தான் கொடுக்க வேண்டுமே தவிர அரசு கொடுக்கப் போவது கிடையாது.
கைக் குழந்தைகள்
கூட்டமாக உள்ள இன்னொரு இடத்தில் சென்று தங்குவது இயல்பாகவே மக்களுக்கு அச்சம் ஏற்படும் என்பதால், 5 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே, கர்நாடகாவிற்குள் வருவதற்கு சம்மதித்து, தனிமைப்படுத்தல் மையங்களுக்குச் சென்றனர். மற்றவர்கள், அப்படியே திரும்பி சென்று விட்டனர். இது பற்றி காரில் பெங்களூர் வர விரும்பி தடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், சுமார் 600 கிலோ மீட்டர்கள் பயணித்து கர்நாடக எல்லைக்கு வந்தடைந்தோம். கைக் குழந்தையும் உள்ளது. அப்படி இருந்தும் எங்களை திருப்பி அனுப்பிவிட்டனர். பாஸ் வைத்திருந்தும் இதுதான் நிலைமை. கைக்குழந்தையை வைத்துக்கொண்டே, மறுபடியும் வீட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை. எவ்வளவு அலைச்சல்.., எவ்வளவு மன உளைச்சல் என்று தெரிவித்தார்.
ஊடக செய்தி எதிரொலி
தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும்தான் இந்த கெடுபிடிகளே தவிர, புதுச்சேரி வாகனங்களுக்கு கிரீன் சிக்னல் காட்டுகிறது கர்நாடக அரசு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், அந்த மாநில மக்களை உள்ளே அனுமதிப்பது ஆபத்தானது என்று நினைக்கிறது கர்நாடகா. இதற்கு கன்னட ஊடகங்களில் நேற்று காலை முதல் வெளியான செய்திகளும் முக்கிய காரணம். ஏனெனில் நேற்று காலை தமிழக மக்களுக்கு கைகளில் சீல் குத்தி வீடுகளுக்கு அனுப்பியபடிதான் இருந்தது கர்நாடக போலீஸ். ஆனால், தமிழகம் போன்ற அதிக பாதிப்புள்ள ஒரு மாநில மக்களை காவல்துறை கர்நாடகாவிற்குள் அனுமதிப்பது ஆபத்தாகும் என செய்தி ஒளிபரப்ப ஆரம்பித்த நிலையில்தான், கர்நாடக காவல்துறை திடீரென தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தும் முடிவுக்கு வந்தது. டிஎஸ்பி அந்தஸ்திலான அதிகாரியே நேரடியாக அத்திபெலே சென்று இந்த பணிகளை பார்வையிட்டார்.
5 மாநிலங்கள்
தமிழகத்துக்கு மட்டுமல்ல, மகாராஷ்டிரா உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள ஐந்து மாநிலங்களை தேர்ந்தெடுத்து இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இது திடீர் அறிவிப்பு என்பதுதான் சிக்கல். எனவே, பாஸ் கிடைத்துள்ளது என்று நினைத்து தமிழர்கள் யாரும் மறுஉத்தரவு வருவதற்கு முன்பாக கர்நாடக வருவதற்கு முயலவேண்டாம். முடிந்த அளவு வீட்டில் இருந்தபடியே வேலையை தொடரவும். அல்லது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஓகே என்று சொன்னால் கர்நாடகா வரலாம் என்ற நிலைதான் இப்போது உள்ளது.
குழப்பங்கள்
அதேநேரம் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவில் வசிக்கக்கூடிய தமிழர்கள், கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்களை வைத்து இருந்தாலும்கூட தமிழகத்திலிருந்து அவர்கள் திரும்பி வரும்போது உள்ளே அனுமதிக்கப்படுவார்களா என்பதில் தெளிவு இல்லை. தமிழகத்திற்குள் செல்லும் வாகனங்கள் தடையின்றி அனுப்பப்படுகின்றன. ஆனால், உள்ளே வரும் வாகனங்கள், அங்கே உள்ள போலீசாருக்கு எந்த மாதிரி அறிவிப்பு வருகிறதோ, அதைப் பொறுத்துதான் முடிவு எடுக்கிறார்கள், என்பதால் இதுகுறித்து உரிய உத்தரவு வரும் வரை மக்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.