பெங்களூர் தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹரிபிரசாத் யார் தெரியுமா? தமிழர்கள் செம ஹேப்பி
பெங்களூர்: பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹரிபிரசாத், டெல்லி வட்டாரத்தில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றோரிடமும் நெருக்கமாக பழக கூடியவர் என்பதை தாண்டி, தமிழிலும் சரளமாக பேசும் திறமை மிக்கவராகும்.
கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிபிரசாத், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் செல்வாக்கு பெற்றவர். இந்த நிலையில்தான், பெங்களூர் தெற்கு தொகுதியில் ஹரிபிரசாத் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 6 முறை பாஜக சார்பில் அனந்தகுமார் எம்.பி.யாக வெற்றி பெற்ற தொகுதி இதுவாகும். ஆனால், அனந்தகுமார் மறைந்த நிலையில், அவரது மனைவி தேஜஸ்வினிக்கு பாஜக வாய்ப்பளிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 28 வயதேயான இளைஞர் தேஜஷ்வி சூர்யாவுக்கு போட்டியிட டிக்கெட் கொடுத்துள்ளது பாஜக. இதனால் அனந்தகுமார் ஆதரவாளர்கள் அப்செட்.
மோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு விளக்கம்!
பெங்களூர் தமிழர்கள்
பெங்களூர் என்பது மினி தமிழ்நாடு என அழைக்கப்பட கூடியது. அந்த அளவுக்கு தமிழர்கள் பெருவாரியாக வசித்து வருகிறார்கள். ஆனால், பெரிய கட்சிகள் எதுவுமே தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட வேட்பாளர்களை கூட களமிறக்குகிறார்களே தவிர தமிழர்களையோ, தமிழ் பேசக்கூடிய அளவுக்கு தமிழர்களுடன் நெருக்கமாக உள்ளோருக்கோ கொடுப்பதில்லை.
தமிழர்களுக்கு நெருக்கமானவர்
அந்த வகையில், தமிழர்கள் மகிழ்ச்சியடையக் கூடிய ஒரு தகவல் என்றால், ஹரிபிரசாத்துக்கு காங்கிரஸ் பெங்களூர் தெற்கு தொகுதியில் வாய்ப்பு தந்துள்ளது என்பதுதான். ஏனெனில், கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும், ஹரிபிரசாத், கர்நாடகாவிலுள்ள தமிழ் அமைப்புகளோடு நீண்டகாலமாக, நெருங்கிய நட்பும், தொடர்பும் கொண்டவர். பெங்களூர் உட்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் வியாபாரிகள் கூட்டமைப்புகள், சங்கங்கள், தமிழ் சங்கங்களுடன் தொடர்பில் இருப்பவர். மேலும், தமிழர்கள் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வரலாறு கொண்டவர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஹரிபிரசாத், சரளமாக தமிழ் பேசி அசத்துவார் என்பது குறிப்பிட்டு சொல்லத்தக்கது.
வாக்கு கேட்கும் தமிழ் அமைப்புகள்
எனவே, ஹரிபிரசாத் பெங்களூர் தெற்கு வேட்பாளராக களமிறங்கியுள்ளது ஒருவகையில் தமிழர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த பல்வேறு தமிழ் வியாபாரிகள் அமைப்புகளும், ஹரிபிரசாத்துக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டு, உள்ளூர் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை கொடுத்து வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிரச்சாரம் தீவிரம்
கர்நாடக அரசியலில் தமிழர்கள் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கும், வியாபாரிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஹரிபிரசாத்துக்கு வாக்களியுங்கள் என தமிழர் சங்கங்கள், அதன் நிர்வாகிகள் விளம்பரங்கள் செய்து வருவதோடு, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழர்களுக்கு நெருக்கமாக உள்ள ஒரு மூத்த தலைவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளதற்கு நன்றி தெரிவிப்புகளும் நடைபெறுகின்றன. பெங்களூர் உட்பட தெற்கு கர்நாடகா தொகுதிகள் பலவற்றுக்கும், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.