ஒரு தகவல் கேட்டது குத்தமா.. பெங்களூர் கோவில் அதிகாரியின் அலப்பறை
பெங்களூர்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த புரிதல் இல்லாமல், கோவில் அதிகாரி ஒருவர் விண்ணப்பதாரரிடம் பணம் செலுத்தக் கோரியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆர்வலர் ஒருவர் பெங்களூருவின் ஹலசுரு பகுதியில் உள்ள ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவிலின் எக்சிகியூடிவ் அதிகாரிக்கு ரூ.2 கொடுத்து, கோவில் பற்றிய தகவல்களை கேட்டிருக்கிறார்.
ஆனால், இரண்டு கடித பரிமாற்றம் மற்றும் ரூ.40 செலவான பிறகு, கோவில் குறித்த தகவல் அந்த விண்ணப்பதாரரை சென்றடைந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 குறித்து அந்த கோவில் அதிகாரி துளி கூட கவலைப்படவில்லை என்பதை அது அம்பலப்படுத்தியுள்ளது.
ஹோரமவு பகுதியைச் சேர்ந்த ஜகன் குமார் என்பவர், ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவிலின் அசையா சொத்து குறித்த விவரங்களை கேட்டு, அந்த கோவில் அதிகாரியிடம் டிசம்பர் 30, 2020 அன்று விண்ணப்பித்து இருந்தார்.
விதிமுறைப்படி
இதற்கு, ரெஜிஸ்டர்ட் போஸ்ட் மூலமாக ஜனவரி 25, 2021 அன்று லெட்டர் அனுப்பிய அந்த கோவில் அதிகாரி, ஜகனை ரூ.2 செலுத்தும்படி குறிப்பிட்டு இருந்தார். விதிமுறைப்படி, விண்ணப்பதாரர் ஏற்கனவே ரூ .10க்கு Postal order அனுப்பியுள்ளதால், பணம் பெறாமல், ஒரு பக்கத்தில் சுருக்கமாக தகவல்களை அதிகாரிகள் அனுப்ப வேண்டும். ஆனால், அந்த அதிகாரியோ, ஒரேயொரு பக்கத்தில் தகவலை அனுப்ப ரூ.2 செலுத்த சொல்லியிருக்கிறார்.
அசையா சொத்துக்கள்
இதுகுறித்து ஜகன் கூறுகையில், கோவில் அதிகாரி எனக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பி இருந்தார். ஒன்றில், ரூ.2 செலுத்தக் கோரினார். மற்றொன்றில், ரூ.40 செலவில் கோவிலின் அசையா சொத்துக்கள் குறித்த தகவலை ரெஜிஸ்டர்ட் தபால் மூலம் அனுப்புவது குறித்து குறிப்பிட்டிருந்தார்.
வேறு சொத்துக்கள் இல்லை
மேலும் அந்த கோவில் குறித்த தகவலில், "ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவிலுக்கு என்று தனியாக அந்த அசையா சொத்துக்களும் இல்லை. 4,727 சதுர மீ கோவில் பரப்பளவு, 858.7 சதுர மீ கோவில் குளம், தேர் வைக்க பயன்படும் ஷெட் 108.7 சதுர மீ பரப்பளவு, கட்டிடம் 163.1 சதுர மீ பரப்பளவு ஆகிய இவற்றை தாண்டி, கோயிலுக்கு வேறெந்த அசையா சொத்துக்களும் இல்லை" என்று பதில் அளித்திருப்பது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக ஜகன் கூறியுள்ளார்.
அவரது கடமை
இது குறித்து சமூக ஆர்வலர் சாய் தத்தா கூறுகையில், "அந்த அதிகாரியின் இந்த செயல்பாடு தகவல் அறியும் ஆர்வலர்களை தொந்தரவு செய்வதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது. பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், விண்ணப்பதாரரிடம் பக்கத்திற்கு ரூ.2 கேட்பதில் அர்த்தம் உள்ளது. விண்ணப்பத்துக்கு ரூ.10 செலுத்திய பிறகும், மீண்டும் ரூ.2 செலுத்தச் சொல்லாமல், கோவில் அதிகாரி தகவல்களை அளித்திருக்க வேண்டியது அவரது கடமை" என்று அவர் தெரிவித்துள்ளார்.