திஷா ரவிக்கு ஆதரவாக ஒலிக்கும் குரல்கள்... திஷா ரவி படித்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் போராட்டம்!
பெங்களூரு: டெல்லி போராட்டம் குறித்து தகவல்கள் அடங்கிய டூல் கிட்' உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக குற்றம்சாட்டி சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா ரவியைக் டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.
திஷா ரவி கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. சமூக அக்கறையாளர்கள், சமூக நலப் போராளிகள் மீது அரசு அடக்குமுறையை செலுத்துவதாக எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது.
திஷா ரவி கைது செய்யப்பட்டதை கண்டித்து மவுண்ட் கார்மல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணியால் பதற்றம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி போலீசார், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறுகின்றனர்.
திஷா ரவி அதிரடி கைது
இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறி பெங்களூருவில் 22 வயதான திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு கைது செய்துள்ளது. டெல்லி போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்கிற விளக்கங்களும் அடங்கிய 'டூல் கிட்' உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக குற்றம்சாட்டி திஷா ரவியைக் கைது செய்துள்ளது டெல்லி போலீஸ்.
கண்டனங்கள் குவிந்து வருகிறது
திஷா ரவி கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. சமூக அக்கறையாளர்கள், சமூக நலப் போராளிகள் மீது அரசு அடக்குமுறையை செலுத்துவதாக எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது.சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா, கிரேட்டா தன்பர்க்கின் 'ஃப்ரைடே'ஸ் ஃபார் ஃபியூச்சர்' (Fridays For Future) என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் ஆவார்.
மவுண்ட் கார்மல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திஷா ரவி பெங்களூரைச் சேர்ந்தவர். அங்குள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். இந்த நிலையில் திஷா ரவி கைது செய்யப்பட்டதை கண்டித்து மவுண்ட் கார்மல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு இளம்பெண்ணை அப்பட்டமாக குறிவைப்பது போல் உள்ளது.
திஷா ரவியை விடுவிக்க வேண்டும்
திஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம். டெல்லி காவல்துறையினர் உடனடியாக திஷா ரவியை விடுவிக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க பெங்களூர் காவல்துறை மற்றும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.