ஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்? பரபரப்பில் கர்நாடக அரசியல்
பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பை மதியம் 1.30 மணிக்குள், முடிக்க வேண்டும் என்று, ஆளுநர் விதித்த கெடுவிற்குள் அது நடக்கவில்லை. எனவே, அடுத்து மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க ஆளுநர் மீண்டும் குமாரசாமிக்கு கெடு விதித்தார். அந்த காலக்கெடுவிற்குள்ளும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை.
நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்திருந்தாலும், பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதமும், அமளியும் நீடித்தது. எனவே நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
எனவே, இன்று பகல் 1.30 மணிக்குள், முதல்வர் குமாரசாமி, சட்டசபையில் தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் கெடு விடுத்திருந்தார்.
நடக்கவில்லை
ஆனால், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது குமாரசாமி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது சில வேறு விவகாரங்கள் பற்றியும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலர் பேசினர். இதனால் மதியம் 1 மணியான பிறகும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் அறிகுறியே தென்படவில்லை.
சபாநாயகர் தீர்மானம்
அப்போதுதான் முதல் முதலாக சட்டசபையில், தனக்கு ஆளுநர் கடிதம் எழுதிய விவகாரத்தை பேசினார் குமாரசாமி. இப்படி சட்டசபை அலுவல் நேரத்தை தீர்மானிக்க ஆளுநருக்கு சட்டத்தில் அவகாசம் உள்ளதா என கேட்டார் அவர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடவில்லை. முதல்வரே கொண்டு வந்த இந்த தீர்மானம் இப்போது அவையில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. எனவே, இது சபாநாயகர் அதிகார வரம்பில் உள்ள விஷயம். இதில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்றார்.
எடியூரப்பா வலியுறுத்தல்
இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பாஜக ஏஜென்ட் என்றும், ஆளுநர் ஒழிக என்றும், அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எழுந்து, "ஆளுநர் உத்தரவிட்ட காலக்கெடுவான 1.30 மணியாகிவிட்டது. உடனடியாக டிவிஷன் வாக்களிப்புக்கு உத்தரவிடுங்கள்" என்று சபாநாயகரை கோரினார்.
சபாநாயகர் உறுதி
ஆனால், சபாநாயகரோ, முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. விவாதம் முடிவடைந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிறகுதான் டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பது விதிமுறை. அதன்படிதான் நான் செயல்படுவேன். விவாதம் முடிவடையவில்லை. எனவே, இப்போது ஓட்டெடுப்பும் இல்லை என்று அறிவித்தார். இதன்பிறகு அவை, சாப்பாடு இடைவேளைக்காக, 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்பிறகு ஆளுநர் மீண்டும் முதல்வருக்கு கடிதம் எழுதினார். அதில், மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதை அவையில் குமாரசாமி தெரிவித்தார். ஆனால், சபாநாயகர், அதுபோன்ற எந்த ஒரு அவசரத்தையும் காட்டவில்லை.
ஆளுநர் என்ன முடிவு
இதையடுத்து குமாரசாமி பேசி முடித்ததும், பல்வேறு ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் பேச ஆரம்பித்தனர். மாலை 6 மணியான பிறகும், பேச்சு தொடர்ந்தது. வாக்கெடுப்பு நடக்கவில்லை. எனவே, இனி ஆளுநர் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுநர் தனது உத்தரவை மீறியதற்காக ஆட்சியை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்பாரா, அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இது கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது