மேகதாது அணை விவகாரம்.. பழிவாங்க துடிக்கும் சதானந்த கவுடா.! தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு
பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கினால், மத்திய அரசிடம் அனுமதி பெற்று தரப்படும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த பேச்சு தமிழக - கர்நாடக உறவை குலைக்கும் முயற்சியாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.
ரூ.5,912 கோடி செலவில் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் மோடி அமைச்சரவையில் மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளார் கர்நாடகத்தை சேர்ந்த சதானந்த கவுடா. இவருக்கு உரம் மற்றும் ரசாயனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக பதவியேற்ற பிறகு, நேற்று முதல் முதலாக பெங்களூருவிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு செய்தியதாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சிறப்பான முறையில் செயல்படுவோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சியை உறுதி செய்து பலம் வாய்ந்த நாட்டை உருவாக்குவதே மத்திய அரசின் குறிக்கோள். மேலும் கர்நாடக மக்கள் டெல்லி வந்தால், அவர்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில், தனி அலுவலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்
இன்றே ஆரம்பிச்சாச்சு.. தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை.. 2 நாட்களுக்கு தொடருமாம்
இந்நிலையில் மேகதாது விகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, மேகதாது அணை கட்டுவதற்குதரிய திட்ட அறிக்கையை கர்நாடக அரசு இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று கூறினார். திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்தால், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் அனைத்து விதமான சட்டப்போரட்டம் செய்யவும், அனுமதிகளை பெற்றுத் தரவும் மத்திய அமைச்சரவையை சேர்ந்த தாம் தயாராகவே இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார்.
சதானந்த கவுடாவின் இந்த பேச்சுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தமிழகத்தை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னடர் - தமிழர் உறவை சீர்குலைப்பதற்கு சதானந்தா கவுடா முயற்சிப்பதாகவும் சாடினார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வியடைந்ததை மனதில் வைத்து, தமிழகத்தை பழிவாங்குவது போல சதானந்தா கவுடா இவ்விகாரத்தில் கருத்து கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது என பாண்டியன் கூறியுள்ளார்.
காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்திலேயே இன்னும் இழுபறி நீடிக்கும் நிலையில், புதிய அணை கட்ட ஒப்புதல் பெற்று தரப்படும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.