மேகதாதுவில் அணை கட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்.. கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்
பெங்களூரு: தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீரை சேமித்து வைக்க, தமிழக அரசு எத்தனை அணைகளை கட்டினாலும் அதற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிக்காது என அம்மாநில அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
அதே போல மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு, தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க, தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு குறித்த விவரங்கள் விளக்கி கூறப்பட்டது. தங்களுக்கு தேவைப்படும் நீரை விட தற்போது கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளதாக புள்ளி விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஒரே நாடு.. ஒரே ரேஷன் அட்டை கூடாது என எதிர்ப்பு.. அதிமுக அரசு எதிர்க்கத் துணியுமா.. ஸ்டாலின் கேள்வி
இதனை தொடர்ந்து மழை பெய்து அணைகளில் நீர் வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், தமிழகத்திற்கு தண்ணீரை திறக்கலாம் என மேலாண்மை ஆணைய தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இது கர்நாடகத்திற்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. மேலும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அரசின் சார்பில் தாம் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புவதாக கூறிய அமைச்சர்,இதற்கு முன் அணைகளில் இருந்து தண்ணீர் விடுவது நம் கைகளில் இருந்தது.
இனி நிலைமை அப்படி இல்லை, அந்த உரிமை தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்திடம் சென்று விட்டது. எனவே அவர்கள் தான் தேவைக்கேற்ப தண்ணீர் திறப்பார்கள். இதனால் இஷ்டம் போல கர்நாடக விவசாயிகள் பயிர் செய்ய முடியாது
மேலும் தமிழக - கர்நாடக விவசாயிகளின் நலன்களுக்காகவும், பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவை மற்றும் மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்திலும், மேகதாது அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசு கேட்டுள்ள அனைத்து ஆவணங்கள், திட்ட வரைவு, அணை கட்டுவதற்கான செலவு மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அணை கட்ட தேவைப்படும் நிதியை எந்த வழியில் பெறுவது என்ற திட்டமும் தயாராக உள்ளது. மேகதாது அணை திட்டம் எந்த நிலையிலும் கைவிடப்படாது என உறுதிபட கூறியுள்ளார்.
எனவே இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன, மத்திய அரசின் முழு அனுமதி கிடைத்தவுடன் அணை கட்டும் பணி முழுவீச்சில் துவக்கப்படும் என்றார்.
கர்நாடக அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் தீவிர முயற்சியை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்த, தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.