பெங்களூரில் நிலையில்லாமல் பதிவாகும் கொரோனா பாதிப்பு... குழப்பத்தில் மருத்துவ நிபுணர்கள்!
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் கொரோனா பாதிப்பு ஒரு நிலையில்லாமல் பதிவாகி வருவது மருத்துவ நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது முதல் நாள் பாதிப்பு 140 ஆகவும் மறுநாள் 570 ஆகவும், அடுத்த நாள் 200 ஆகவும் என பாதிப்பு நிலையில்லாமல் இருக்கிறது.
தற்போது பரிசோதனை முடிவுகள் வேகமாக இருப்பதால் அது பாதிப்பு ஏற்ற, இறக்கங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா
ஒரு ஆண்டை கடந்தும் இன்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் உலகின் அனைத்து பகுதிகளிலும் கரும்புள்ளியாக மாறி விட்டது. கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
மருத்துவ நிபுணர்கள் குழப்பம்
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து விட்டது. இருந்தாலும் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லை. இந்த நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களுருவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து, மறுநாள் அதிகமாக காணப்பட்டு ஒரு நிலையாக இல்லாமல் இருப்பது மருத்துவ நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்ற, இறக்க பாதிப்பு
ஜனவரி 1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பெங்களுருவில் கொரோனா தினசரி சராசரி பாதிப்பு சுமார் 400 ஆக இருந்தன. ஜனவரி 8-ம் தேதி பாதிப்பு 479 ஆக உயர்ந்தது. அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து 450-க்கு மேல் பாதிப்புகள் இருந்தன. இருப்பினும் ஜனவரி 11-ம் தேதிக்கு மேல் புதிய பாதிப்புகள் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்தது. அதாவது ஜனவரி 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தினமும் சராசரி பாதிப்பு 141 ஆகக் குறைந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஜனவரி 23 அன்று கொரோனா பாதிப்பு 527 ஆக அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. அதற்கு மறுநாள் 24-ம் தேதி பெங்களூரு நகரில் 200 புதிய பாதிப்புகள் மட்டுமே காணப்பட்டன. இவ்வாறு நிலையில்லாமல் பாதிப்புகள் பதிவாகி வருவது மருத்துவ நிபுணர்களையே குழப்பம் அடைய செய்துள்ளது.
புதிய வைரஸ் இல்லை
இது தொடர்பாக பிரபல தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கிரிதர் பாபு கூறியதாவது:- எனக்குத் தெரிந்தவரை, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்களுக்கு எந்த வடிவமும் இல்லை. ஏற்ற இறக்கங்கள் விடுமுறை நாட்களின் விளைவாகவும், சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனையை மேற்கொள்வதற்கும் காரணமாக இருக்கலாம். இதுவரை மரபணு வரிசைமுறை மூலம் வைரஸின் புதிய மாறுபாடு எதுவும் கண்டறியப்படவில்லை என்று கூறினார்.
பரிசோதனை முடிவின் வேகம்
மற்றொரு மருத்துவர் சுஜய் பிரசாத் கூறுகையில், ஆய்வக செயலாக்கத்திற்காக அனுப்பப்படும் சிறிய அளவிலான மாதிரிகளில் குறைவான நேர்மறைகள் விகிதம் காணப்படுகின்றன. முன்னதாக, ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்காக நாளொன்றுக்கு 5,000 மாதிரிகளை பெறுவோம். அவற்றில் 1,500 நேர்மறை பாதிப்புகள் இருக்கும், இப்போது இது ஒரு நாளைக்கு சுமார் 600 மாதிரிகள் வருகின்றன. அவற்றில் 15-20 நேர்மறைகள் மட்டுமே காணப்படுகின்றன. தற்போது பரிசோதனை முடிவுகள் வேகமாக இருப்பதால் அது பாதிப்பு ஏற்ற, இறங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் விளக்கினார்.