ஆண்களை விட பெஸ்ட்டா இருக்கணும்.. அதுதான் என் பாலிசி.. பிரேக் டான்ஸில் பின்னும் பெங்களூர் மங்கை!
பெங்களூரு : சர்வதேச அளவில் புகழ் மற்றும் வரவேற்பை பெற்றுள்ள பிரேக்டான்சின் மீது இந்தியர்களுக்கு விருப்பம் இருந்தாலும், அதை பயிற்சி செய்பவர்கள் மிகவும் குறைவுதான். இந்த நடனத்தில் தன்னை நிரூபித்துவரும் பெங்களூருவின் ஜோஹன்னா ரோட்ரிக், இதுதொடர்பான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்த வாரத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 15 பெண்கள் மற்றும் 16 ஆண்களுடன் அவர் போட்டியிடுகிறார்.
உசைன் போல்ட் போன்ற விளையாட்டு வீரர்களை தன்னுடைய மானசீக குருவாக கொண்டுள்ள 23 வயதான இந்த பெண் தற்போது யோகா ஆசிரியையாக செயல்பட்டு வருகிறார்.
விளையாட விடுங்கள்
பெங்களூருவை சேர்ந்த ஜோஹன்னா, சிறு வயதிலேயே பெண்களை ஆண்களிடமிருந்து தனிப்படுத்தாதீர்கள் என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விளையாட்டு போன்றவற்றில் அவர்கள் தங்களுக்கென்று இலக்கை வைத்து விளையாட அனுமதிக்கவும் கோரியுள்ளார்.
சிறப்பாக செய்ய ஆசை
எப்பொழுதுமே ஆண்களை விட ஒரு படி மேலே சிறப்பாக செய்ய தான் ஆசைப்படுவதாக தெரிவித்த ஜோஹன்னா, தன்னுடைய தந்தை இறந்தநிலையில், தன்னுடைய தாய், தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
பிரேக்கில் புதிய யுக்திகள்
விதவையான தன்னுடைய தாயிடம் இருந்து தனது வாழ்க்கைக்கான உத்வேகங்களை பெற்ற ஜோஹன்னா, பரதநாட்டியம் உள்ளிட்டவற்றில் புதிய யுக்திகளை புகுத்தி பிரேக் டான்சை பயிற்சி செய்து வருவதாக தெரிவிக்கிறார்.
தன்னம்பிக்கை மேம்படுகிறது
தன்னுடைய இளம்வயதில் ஒருமுறை பிரேக்டான்சை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், முதல் பார்வையிலேயே அது தன்னை கவர்ந்து விட்டதாகவும் நடனம் ஆடுபவர்களுக்கு அதில் உள்ள சுதந்திரம் போல வேறு எதிலும் கிடையாது என்றும் ஜோஹன்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக சேர்ப்பு
வரும் 2024ல் பாரீசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் முதல்முறையாக பிரேக்டான்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நடனத்தில் பயிற்சி மேற்கொள்ள இந்தியாவின் அனைத்து இளைஞர்களும் முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
40 பெண் பிரேக் டான்சர்கள்
இந்தியாவில் பிரேக் டான்ஸ் பயிற்சி மேற்கொண்டுவருபவர்கள் குறித்த எந்தவிதமான முறையான கணக்கீடுகளும் இல்லை என்றாலும், இந்திய அளவில் 800 ஆண்கள் இந்த நடனத்தை பயின்று வருவதாகவும், ஆனால் 40 பெண்கள் மட்டுமே இதை முறையாக பயின்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"எதிர்வினைகள் என்னை பாதிக்காது"
ஆரம்பத்தில் இந்த நடனத்தை பயில்வதில் தனக்கு தயக்கம் இருந்ததாகவும் ஆனால் காலப்போக்கில் அந்த தயக்கம் உடைப்பட்டு தற்போது பார்க், சாலையோரங்களிலும் நடனம் ஆடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் ஜோஹன்னா கூறியுள்ளார். மக்களின் எந்தவிதமான எதிர்வினையும் தன்னை பாதிப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார்.