ஓ பட்டர் பிளை.. பெங்களூர் வானை.. வானவில்லாக்கும் பட்டாம்பூச்சிக் கூட்டம்!
பெங்களூர்: யாருக்குத்தான் பட்டாம் பூச்சிகளைப் பிடிக்காது.. கலர் கலராக கண்களுக்கு விருந்தளிக்கும் அற்பதப் படைப்பு பட்டாம் பூச்சிகள். பெங்களூரில் சமீப நாட்களாக பட்டாம் பூச்சிக் கூட்டங்கள் அதிகரித்துள்ளதாம்.
கண்ணுக்கும், கவிஞர்களுக்கும், ஏன்.. காதலர்களுக்கும் செமத்தியான விருந்தாக அமைவது பட்டாம் பூச்சிகள்தான். எத்தனை எத்தனை கவிதைகள் இந்த பட்டாம் பூச்சிகளை வைத்து வடித்துள்ளனர். இப்படிப்பட்ட பட்டாம் பூச்சிகள் இப்போது கூட்டம் கூட்டமாக பெங்களூரை கலர்புல்லாக மாற்றிக் கொண்டிருக்கின்றனவாம்.
கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் பட்டாம் பூச்சிக் கூட்டங்களைப் பார்க்க முடிவதாக பலரும் கூறுகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடந்த 3 நாட்களாகவே காலையில் பார்க்கிறேன்.. கூட்டம் கூட்டமாக பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன. குறிப்பாக பனசங்கரி 6வது ஸ்டேஜ் பகுதியில் பெரும் கூட்டமாக அவை பறப்பதை காண முடிகிறது. அந்தப் பகுதியையே மூடி விடுவது போல பறப்பதை நான் பார்த்தேன்.
கூட்டம் கூட்டமாக
இந்த பட்டாம் பூச்சிகள் கருப்பு நிறத்தில் உள்ளன. வேறு ஏதோ வெட்டுக் கிளிக் கூட்டம் போல இருக்குமோ என்றுதான் பயந்தேன். ஆனால் சற்று உற்று நோக்கிப் பார்த்தபோதுதான் அவை பட்டாம் பூச்சி என்று தெரிந்தது. மிகப் பெரிய கூட்டம் அது. ஆயிரக்கணக்கில் இருக்கலாம். இதுபோல பட்டாம் பூச்சிகளை கூட்டமாக பார்த்ததே இல்லை.
கண்ணுக்கு விருந்து
அதேபோல மைசூர் செல்லும் வழியில் ராமநகரா பகுதியிலும் இதே போல பட்டாம் பூச்சி பெரும் கூட்டத்தைக் காண முடிந்தது என்று கூறுகிறார் அந்த பெங்களூர் காரர். பெங்களூரைப் பொறுத்தவரை இதுபோல பறவைகள், பூச்சிகள் பெரும் கூட்டமாக வருவது இது முதல் முறையல்ல என்று சொல்கிறார்கள். காரணம், பல்வேறு ஊர்கள், நாடுகள், கண்டங்களிலிருந்து இடம் பெயர்ந்து பறந்து வரும் பறவைகளுக்கு பெங்களூரும் ஒரு முக்கிய இடமாகும். எனவே இந்தப் பக்கம் பறவைகள், பட்டாம் பூச்சிகள் போன்றவை அதிகம் வருவது ஆச்சரியமில்லைதான்.
பெங்களூரில்தான் ஆச்சரியம்
இதுகுறித்து மதுசூதன் என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர் கூறுகையில், இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. கிராமப்புறங்களில் இதுபோன்ற காட்சிகள் மிக மிக சாதாரணம். அவர்களுக்கு இது ஆச்சரியமானதுமல்ல. ஆனால் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்குத்தான் இது ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் கட்டடக் காடாக மாறிப் போய் விட்டதால் பெங்களூர் நகரில் எந்த இயற்கை நிகழ்வு நடந்தாலும் அது ஆச்சரியம் தரத்தான் செய்யும்.
இயற்கை நிகழ்வு
இந்த பட்டாம் பூச்சிகள் இடம் பெயர்ந்து செல்லக் கூடியவை. இந்தப் பக்கமாக அவை கூட்டம் கூட்டமாக வருகின்றன. இது இயற்கையான நிகழ்வுதான். இவை காடுகளை நோக்கி போகக் கூடியவை. கருப்பு நிறத்தில் பட்டாம் பூச்சிகள் இயல்பானவைதான். அதேபோல நீல நிறத்திலும் பட்டாம் பூச்சிகள் உள்ளன. இவை சாதாரணமானவைதான்.
சோலார் பேனல் சிறகு
இந்த பட்டாம் பூச்சிகள் கிட்டத்தட்ட 450 கிலோமீட்டர் வரை விடாமல் பறக்கக் கூடியவையாகும். பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் அல்லது கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இவை செல்லக் கூடும். வெப்ப நிலை 25 முதல் 25 டிகிரி செல்சியஸாக இருக்கும்போது இவற்றின் சிறகுகள் சோலார் பேனல் போல செயல்படும். அதாவது சூரிய சக்தியை சேமித்து வைக்கக் கூடிய ஆற்றல் இந்த சிறகுகளுக்கு உள்ளது.
அதுக்கும் டயர்ட் ஆகும்ல
அதேசமயம், பட்டாம் பூச்சிகளுக்கும் கூட சோர்வு ஏற்படும். தொடர்ந்து பறந்தால் வரும் சோர்வை தவிர்க்க எங்காவது அவை ஹால்ட் அடிக்கும். பெங்களூர் போன்ற கட்டடங்கள் மிகுந்த விட்ட நகரங்களில் இதுபோன்று வரும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்க பட்டர்பிளை கார்டன்களை அமைக்கலாம் என்றார் மதுசூதன்.
பெங்களூர் காரர்களே.. காலையில் எழுந்து வெளியில் போய் பாருங்க.. பட்டாம் பூச்சிக் கூட்டம் அந்தப் பக்கம் வந்தால் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.. போட்டோ ஏதாவது பிடித்தால் எங்களுக்கும் அனுப்புங்க..!