கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை- தேடப்பட்ட 2 தீவிரவாதிகள் கர்நாடகாவில் அதிரடி கைது
பெங்களூரு: கன்னியாகுமரி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தவ்பீக், அப்துல் சமீம் ஆகிய 2 தீவிரவாதிகளும் கர்நாடகாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த போது கடந்த 8-ந் தேதி வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கொலையாளிகள் தவ்பீக், அப்துல் சமீம் என்பது தெரியவந்தது.
இந்த இருவரும் கேரளாவுக்கு தப்பி சென்றதால் அம்மாநில போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கேரளாவில் 40க்கும் மேற்பட்டோர் சுற்றி வளைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தேடப்பட்ட 2 தீவிரவாதிகளும் கர்நாடகாவின் உடுப்பியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா போலீசார் இணைந்து உடுப்பியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதில் பதுங்கி இருந்த தவ்பீக், அப்துல் சமீம் இருவரும் வசமாக சிக்கினர். இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த நபரும் பிடிபட்டார். அனைவரும் பெங்களூருவுக்குக் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.