இந்த 2 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்! கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய கர்நாடகா
பெங்களூர்: மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கோவிட் -19 கேஸ்கள் அதிகரிப்பதை சுட்டிக் காட்டியுள்ள கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர், கேரளா மட்டுமல்லாது மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா வருவோரும் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட்டுடன் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரில் இன்று, செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர், கேரளாவில் தினமும் சராசரியாக 4,000-5,000 கொரோனா கேஸ்களும், மகாராஷ்டிராவில் 5,000-6,000 கேஸ்களும் பதிவாகின்றன.
கர்நாடகா இந்த இரு மாநிலங்களுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எனவே, பாதுகாப்புக்காக ஒரு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளோம்.
நுழைய விடுவோம்
ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ்களை வழங்கினால் மட்டுமே இந்த மாநிலங்களிலிருந்து வருவோர் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். கர்நாடகாவில் தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்படவில்லை.
உருமாறிய கொரோனா
இங்கிலாந்திலிருந்து பெங்களூருக்கு பயணித்த பயணிகளில் சிலருக்கு பிரிட்டன் வகை உருமாறிய கொரோனா இருந்ததை மட்டுமே நாங்கள் கண்டறிந்துள்ளோம். சமூக பரவலாக இதை மாற விடவில்லை." என்று தெரிவித்தார். அதேநேரம் பஸ் நிலையங்களில் சான்றிதழை பரிசோதிக்கிறார்களே தவிர, சொந்த கார்களில் கர்நாடகா வருவோரிடம் எப்படி சான்றிதழ் பரிசோதிக்கப்படுகிறது என்பதில் தெளிவு இல்லை.
நெகட்டிவ் சான்றிதழ்
சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக அரசு, பிரிட்டன், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாய ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வேண்டும் என்று அறிவித்தது. சர்வதேச பயணிகள் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அடுத்த ஆர்டி-பி.சி.ஆர் டெஸ்ட் 7 வது நாளில் நடத்தப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகா நிலவரம்
கர்நாடகாவில் நேற்று 386 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியிருந்தன. மொத்த கேஸ்கள் எண்ணிக்கை 9,47,246 ஆக இருந்தது.