கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்றும் தளபதிகள் அல்ல.. வெறும் நிர்வாகிகள்- டிடிவி தினகரன்
பெங்களூர்: கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்றும் தளபதிகள் அல்ல. அவர்கள் வெறும் நிர்வாகிகள்தான் என டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
டிடிவி தினகரனுக்கு பக்கப்பலமாக இருந்த செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன்னரே திமுகவில் இணைந்து தற்போது அரவக்குறிச்சி எம்எல்ஏவாகிவிட்டார். எனினும் அமமுக போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து தங்கதமிழ்ச் செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் முறையே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சென்றுவிட்டனர். அதுபோல் தினகரனுக்கு ஆதரவாக இருந்த அதிருப்தி எம்எல்ஏக்களான ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் மீண்டும் அதிமுகவிலேயே தொடர்வதாக அறிவித்து விட்டனர்.
இப்படி அடுத்தடுத்து நிர்வாகிகளை இழந்து வரும் டிடிவி தினகரன் இன்றைய தினம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமமுகவுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியலை காண்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அமமுகவிலிருந்து விலக முடிவெடுத்த பின்னர் என் மீது குறை கூறிவிட்டு விலகி சென்றுள்ளார் இசக்கி சுப்பையா.
விலகி சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் அல்ல. வெறும் நிர்வாகிகள்தான் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.