உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போறீங்களா... நிருபரை கலாய்த்த தினகரன்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து சிறை வளாகம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து கேள்விகளுக்கும் வழக்கமான தனது டிரேட் மார்க் சிரிப்புடன் பதில்களை அளித்தார்.
அந்த நேரம் பார்த்து பெங்களூரு புகழேந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அது குறித்து பதில் அளித்த தினகரன், புகழேந்தி ஒரு 24-ம் புலிகேசி என விமர்சித்தார்.
சசியுடன் சந்திப்பு
நாளை மறுதினம் தீபாவளி வரும் நிலையில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்தித்து பேசியது மன்னார்குடி குடும்ப வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எப்போது சீனா காலர் சட்டைகள் அணியும் தினகரன், இன்று கருப்பு நிற டி ஷர்ட் அணிந்தவாறு சசிகலாவை சந்தித்தார். தனது சோகத்தையும், வருத்தத்தையும் சசிகலாவிடம் வெளிபடுத்தும் விதமாக அவர் அந்த டி ஷர்டை அணிந்திருக்கக்கூடும் எனக் கூறபடுகிறது.
கன்னடம் தெரியும்
சசிகலா ஏறத்தாழ 3 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ளதால் அவர் இப்போது கன்னட மொழி பேசுவதாக தெரிவித்தார் தினகரன். மேலும், சிறை விதிமுறைகளை சசிகலா மீறியதில்லை என்றும், அது தொடர்பாக சிலர் வதந்தி பரப்பியதாகவும் கூறினார்.
சுற்றுப்பயணம்
அமமுகவை வளர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என செய்தியாளர் ஒருவர் வினவ, அதற்கு பதில் அளித்த தினகரன் தொடர்ந்து கட்சி வளர்ச்சிப்பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், நேற்று வீட்டில் இருந்து புறப்பட்ட தாம் நவம்பர் 4-ம் தேதி தான் சென்னை திரும்பவுள்ளதாகவும் கூறினார். அதுவரை தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதால் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
கலாய்ப்பு
இதைத் தொடர்ந்து மற்றொரு செய்தியாளர் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்ப, அவரை பார்த்து நீங்க உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறீங்களா..சொல்லுங்க..அதைப் பற்றி பேசுவோம் என கலாய்த்தார்.
24-ம் புலிகேசி
பெங்களூரு புகழேந்தியை பற்றி பேசினால் தமக்கு சிரிப்பு தான் வருவதாகவும், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் வரும் வடிவேலுவை போன்றவர் புகழேந்தி எனவும் விமர்சித்தார். மேலும், அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனக் கூறினார்.