சிறையில் சசிகலாவுக்கு தனி சமையல்.. விசாரணை குழுவிடம் காட்டி கொடுத்தது இந்த மசாலாதான்!
பெங்களூர்: சிறையில் சசிகலாவுக்கு தனி சமையல் என்பதை விசாரணை குழுவிடம் காட்டி கொடுத்தது மஞ்சள் தூளாம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். இந்த சிறையை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறைத் துறை டிஐஜி ரூபா ஆய்வு செய்தார். அப்போது சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதை அவர் அறிந்தார்.
இதையடுத்து உடனடியாக டிஜிபிக்கு புகார் கொடுத்தார். இந்த விவகாரம் பெரிய விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மாநில அரசு இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது.
விசாரணை குழு
இதனிடையே சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ரூபா கேள்வி எழுப்பியிருந்தார். அதில் அவருக்கு கிடைத்த பதிலை விசாரணை குழுவிடம் சமர்ப்பித்தார். அதில் சசிகலாவுக்கு ஒரு அறைக்கு பதிலாக கூடுதலாக 4 அறைகள் வழங்கப்பட்டன.
வேறு அறைகளுக்கு
சசிகலாவுக்கும் இளவரசிக்கும் முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களை கூறி அந்த அறைக்கு பக்கத்தில் இருந்த அறைகளில் யாரையும் அனுமதிப்பதில்லை. சசிகலா சிறைக்கு வந்தவுடன் பக்கத்து அறையில் இருந்த சிறை கைதிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
23 பார்வையாளர்களுக்கு பதில் 48
சிறையில் தனியாக சமைத்து உண்ண கைதிகளுக்கு அனுமதி இல்லை என்கிற நிலையில் சசிகலாவுக்கு அஜந்தா என்ற பெண் கைதியை சமையல் செய்ய சிறை அதிகாரிகள் நியமித்தனர். சசிகலா 23 பார்வையாளர்களை மட்டுமே பார்க்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
சாதாரண உடைகள்
ஆனால் அவரோ 48 பேரை சந்தித்துள்ளார். இது அப்பட்டமான விதிமீறல். சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது சசியும் இளவரசியும் கைதிக்கான சீருடைகளை அணிந்து கொள்ளாமல் வேறு ஆடைகளை அணிந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
அடையாளம்
எனவே ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், விசாரணை குழு சசிகலா அறையில் ஆய்வு நடத்த சென்றது. அப்போது அங்கு அவர் தனியாக சமையல் செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது.
சசிகலாவுக்கு தனி சமையல்
இதையடுத்து அறையில் பல்வேறு இடங்களில் தேடிய போது மஞ்சள் பொடி பாக்கெட் இருந்ததை விசாரணை குழு கண்டறிந்தது. இதை வைத்து சசிகலா சிறையில் சமையல் செய்தார் என்பது தெரியவந்தது.