சர்ச்சை டிவீட்.. கணக்கை முடக்கியது டிவிட்டர்.. கொந்தளித்த பாஜக எம்பி.. பிரதமருக்கு ஆவேச கடிதம்
பெங்களூர்: கர்நாடக பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டேவின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் பிளாக் செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெர்சன் வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரில் உத்தர கன்னடா கடலோர மாவட்டத்தில் உள்ள சிர்சி தொகுதியின் எம்பியாக உள்ளார் அனந்தகுமார் ஹெக்டே (51). இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
இந்த நிலையில் அனந்தகுமார் ஹெக்டே ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்ததால் அவரது கணக்கை பிளாக் செய்துவிட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பதிவிட்ட ட்வீட்டுகளை டெலிட் செய்தால் ட்விட்டர் கணக்கு விடுவிக்கப்படும் என அந்த நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது.
நாங்கள் தவறாக பிளாக் செய்துவிட்டோம் என நீங்கள் கருதினால் முறையிடலாம் என ஹெக்டேவிடம் ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹெக்டே கடிதம் ஒன்றை ஏப்ரல் 25 ஆம் தேதி எழுதியுள்ளார்.
அதில் முன்னறிவிப்பு ஏதுமின்றி எனது ட்விட்டர் கணக்கு பிளாக் செய்யப்பட்டுள்ளது. எனவே போர்க் கால அடிப்படையில் இந்திய வெர்சனை நாம் உருவாக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தில் தேவையில்லாமல் தலையிடும் ட்விட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்து சுதந்திரத்தில் அமெரிக்கா நாட்டு நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவது நாட்டின் நலனுக்கும் ஜனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும். இது போல் முன்னறிவிப்பு ஏதுமின்றி எனது கணக்கை முடக்கியது ஒரு அமெரிக்க நிறுவனம் டிஜிட்டல் முறையில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவது போன்றதாகும் என குறிப்பிட்டு அவருக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே நடந்த உரையாடல்களை பிரதமருக்கு அனுப்பி உள்ளார்.