கர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் குமாரசாமி இன்று மாலை 5 மணிக்கு முன்னதாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.
குமாரசாமி அரசுக்கான ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர். மேலும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்தனர். இவர்களில் ராமலிங்கா ரெட்டி மட்டும் ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் சட்டசபையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார். இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே எம்.எல்.ஏக்கள் ராஜினாமா வழக்கில் அளித்த தீர்ப்பில் விளக்கம் கேட்டு குமாரசாமி மற்றும் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. முன்னதாக குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய் 2 முறை கெடு விதித்திருந்தார்.
இதை குமாரசாமி நிராகரித்ததால் டெல்லிக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முன்னதாக குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர்.
இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், சட்டசபையில் உடனே வாக்கெடுப்பபு நடத்த உத்தரவிட முடியாது; இந்த கோரிக்கையை அவசர வழக்காக விசாரிக்கவும் முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.