'பரபரப்பு..' பெங்களூருவில் காரில் வைத்து இளம்பெண் பாலியல் வன்புணர்வு.. ஊபர் ஓட்டுநர் கைது
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரூவில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் ஊபர் ஒட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரூவில் இன்று காலை எச்எஸ்ஆர் லேஅவுட் என்ற இடத்தில் இருந்து முருகேஷ் பால்யா என்ற பகுதிக்குச் செல்ல இளம் பெண் ஒருவர் ஊபர் காரை புக் செய்துள்ளார்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
வழக்கம் போல ஊபர் ஓட்டுநர் அந்தப் பெண்ணை முருகேஷ் பால்யா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சேருமிடம் வந்தவுடன், அந்த பெண் காரில் இருந்து இறங்க முயன்றுள்ளார்.
பாலியல் வன்புணர்வு சம்பவம்
அப்போது அந்தப் பெண்ணை காரில் இருந்து இறங்கவிடாமல் லாக் செய்த கார் ஓட்டுநர், அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த பெண்ணை காரில் இருந்து வெளியே தள்ளியுள்ளார். அப்போது அந்த டிரைவரிடம் இருந்த செல்போனை இந்த பெண் பிடுங்கியுள்ளார். எங்கு தான் மாட்டிக்கொள்வோமோ என்று அச்சமடைந்த அந்த டிரைவர், செல்போனை அந்த பெண்ணிடம் இருந்து வாங்காமல் அங்கிருந்து ஓடிவிட்டார்.
ஓட்டுநர் கைது
அதிகாலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் போலீசாரிடம் இன்று புகார் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஊபர் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், விசாரணை இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதால், அந்த டிரைவரின் பெயர் உட்பட எந்த தகவல்களையும் போலீசார் வெளியிடவில்லை.
விசாரணை தீவிரம்
இது தொடர்பாகக் கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊபர் ஓட்டுநர் மீது 376 பிரிவின் கீழ் பாலியல் வன்புணர்வு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு, ஆந்திராவைச் சேர்ந்த டிரைவரை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல அந்தப் பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது" என்றார்.
சட்டசபை கூட்டத்தொடர்
பாதிக்கப்பட்ட அந்த பெண் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் கடந்த சில மாதங்களாகவே பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த ஊபர் ஒட்டுநரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கர்நாடகாவில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.
முதல்வர் விளக்கம்
இந்த பாலியல் வன்புணர்வு தொடர்பாகவும் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மைசூருவில் நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேட்ட கேள்விக்குப் , "எந்தவொரு வழக்குகளிலும் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்துவதில்லை. குற்றங்கள் தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டவுடனேயே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தவித காலதாமதமும் செய்வதில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.