இந்த நிலை எந்த கட்சிக்கும் வரக்கூடாது.. 'பெங்களூர் வடக்கு' தொகுதிக்கு வேட்பாளரை கடன் வாங்கும் கவுடா
பெங்களூர்: பெங்களூர் வடக்கு தொகுதிக்கு நிறுத்துவதற்கு வேட்பாளர்கள் இல்லாததால் காங்கிரஸுடம் வேட்பாளரை கடனாக கேட்கிறது, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ம.ஜ.த கட்சியின் எச்.டி.குமாரசாமி முதல்வராக பதவி வகிக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட இந்த கூட்டணி தற்போது லோக்சபா தேர்தலிலும் தொடருகிறது. மொத்தமுள்ள 28 லோக்சபா தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
எங்க யாரையுமே காணோம்.. முதல்வரின் பிரச்சாரங்களில் குறைவாக கூடும் கூட்டம்! உண்மையா?
காவிரி பாசன மாவட்ட கட்சி
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை பொறுத்த அளவில், மாநிலம் முழுதும் அது பலமான அல்லது வலுவான அடித்தளம் கொண்ட கட்சி கிடையாது. மைசூரு உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகள் மற்றும் ஹாசன் மாவட்டத்தில் மட்டுமே அந்த கட்சி பலமானதாக இருந்தாலும், தங்களுக்கு 12 லோக்சபா தொகுதிகள் வேண்டும் என்று கடைசி வரை வாதிட்டு பார்த்தது.
ராகுல் காந்தி உத்தரவு
அதேநேரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அதிலும் குறிப்பாக சித்தராமையா கோஷ்டியினர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 6 தொகுதிகளுக்கு மேல் கொடுப்பது அனாவசியம் என்று தேசிய தலைமையிடம், வாதிட்டனர். இருப்பினும் மஜத தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்டி தேவகவுடா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தொகுதிகளை அதிகரிக்க வலியுறுத்தினார். இதன் காரணமாகத்தான் 8 தொகுதிகள் வழங்கப்பட்டன.
கடன் கேட்கும் ம.ஜ.த
ஆனால் பெங்களூர் வடக்கு தொகுதியில் மக்களிடம் அறிமுகமான ஒரு நல்ல வேட்பாளர் இல்லாத காரணத்தால், இப்போது அந்த தொகுதியை விட்டுத்தர முன்வந்துள்ளது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி. அதேநேரம் முழுமையாக ஒப்படைக்காமல், காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களை கடனாக, தரும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்பது நிபந்தனை. இதற்கு காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் சம்பாதித்தாலும், சித்தராமையா கோஷ்டியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூர் வடக்கு
காங்கிரஸ் கட்சியின் வடக்கு பெங்களூர் பிரமுகர் பி.எல்.ஷங்கர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட தேவகவுடா விரும்புகிறார். இது தொடர்பாக தேவகவுடாவின் மகனும், கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சருமான ரேவண்ணா, சங்கரை சந்தித்து அவரது ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்த கருத்து வேற்றுமை காரணமாக இன்னமும் பெங்களூர் வடக்கு தொகுதிக்கான வேட்பாளரை மதசார்பற்ற ஜனதா தளம் அறிவிக்கவில்லை.
போட்டியில் கவுடா
முன்னதாக, பெங்களூர் வடக்கு தொகுதியில் தேவகவுடா, போட்டியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு தும்கூர் தொகுதியில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பெங்களூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 5 சட்டசபை தொகுதிகளை காங்கிரஸ் கட்சிதான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.