மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!
பெங்களூர்: உடல் நலக்குறைவால் மரணமடைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி.யும், மத்திய அமைச்சருமாக பதவி வகித்து வந்தவருமான, பாஜக மூத்த தலைவர், அனந்தகுமார் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நவம்பர் 12ம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.
10 நாட்களுக்கும் மேலாக பெங்களூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனந்தகுமார், மறைவிற்கு, குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை, நேரில் சென்று, அனந்தகுமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து இன்று காலை, பெங்களூரிலுள்ள கர்நாடக மாநில பாஜக அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அனந்தகுமார் உடல் வைக்கப்பட்டது.
பின்னர், பசவனகுடியிலுள்ள நேஷனல் மருத்துவ கல்லூரி மைதானத்தில் அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சாமராஜ்பேட்டை மயானத்தில் அவரது உடல், பிராமணர்கள் வழக்கப்படி, வேத மந்திரங்கள் முழங்க, தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு அனந்தகுமாருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.