ஊருக்குத்தான் ரூல்ஸா.. விதிமீறல் சர்ச்சை.. செம விளக்கம் கொடுத்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா
பெங்களூர்: டெல்லியிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்ற தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால் இதற்கு அவர் ஒரு பக்கா விளக்கம் கொடுத்துள்ளார்.
பெங்களூர் வடக்கு தொகுதியின் பாஜக எம்.பி. சதானந்தகவுடா. இவர், மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இன்று டெல்லியில் இருந்து, பெங்களூரு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் வந்த அவர், உடனடியாக தனது காரில் ஏறி தனது இல்லத்திற்கு சென்றார். இன்ஸ்ட்டிடியூஷனல் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை அவர் தவிர்த்துவிட்டார்.
திடீர் மர்ம சத்தம்.. சுழன்றடித்து சுருட்டி வீசிய சூறாவளி.. என்னதான் நடக்கிறது பெங்களூரில்?
கர்நாடக அரசு உத்தரவு மீறல்
இதன் மூலம், கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை, அமைச்சரே மீறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், தமிழ்நாடு, டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து உள்வரும் உள்நாட்டு விமான பயணிகள் 7 நாள் நிறுவன தனிமைப்படுத்தலுக்குப் பின், வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள்" என்று கர்நாடக காவல்துறை டிஜிபி பிரவீன் சூட் 2 நாட்கள் முன்பாக அறிவித்திருந்தார்.
ஆனால் சதானந்தகவுடா டெல்லியிலிருந்து வந்தும்கூட, இந்த விதிமுறைக்கு உட்படவில்லை.
அத்தியாவசியம்
இந்த நிலையில், சர்ச்சை எழுந்ததால், ஆங்கில டிவி சேனல் ஒன்றிடம் இதுகுறித்து, பேசிய சதானந்த கவுடா, மாநில அரசின் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின்படி சில பிரிவினருக்கு விலக்குகள் உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நபர்கள், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டிய விஷயங்களை கவனித்துக்கொள்பவர்களுக்கு, தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மருந்துகள்
நான் மருந்தகத்துறை அமைச்சர். எனது துறையால் போதுமான மருந்துகள் வழங்கப்படாவிட்டால் என்ன நடக்கும்? எனவே இந்த விஷயங்களை கவனித்துக்கொள்வது, பல்வேறு மாநில அரசுகளுடன் கலந்துரையாடுவது எனது பொறுப்பு, அதனால்தான் நான் எங்கும் செல்லவில்லை, நான் இங்கேயேதான் இருக்கிறேன். நான் கடந்த 63 நாட்களாக டெல்லியில் இருந்தேன், ஆனால் பெங்களூருக்கு திரும்பி வர எந்தவொரு சாட்டர்ட் விமானத்தையும் நான் வாடகைக்கு எடுக்கவில்லை. இன்று எனக்கு ஒரு சிறப்பு விமானம் கிடைத்தது, நான் பெங்களூர் திரும்பினேன்.
விளக்கம்
நான் மாநில அரசுகளுடன் தொடர்பு கொள்ளாவிட்டால், என்ன நடக்கும்? மொத்த மருந்து சப்ளைகளிலும் பாதிப்பு ஏற்படும். எனவேதான், நான் தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. இவ்வாறு ஒரு விளக்கம் அளித்துள்ளார் சதானந்தகவுடா. மேலும், அவர் இன்று மாலை 4 மணிக்கு பெங்களூருவில் சுகாதார அமைச்சர் மற்றும் கர்நாடக துணை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உள்நாட்டு பயணிகள் விமான நடவடிக்கை இன்று மீண்டும் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.