கொரோனாவை உருவாக்கியது சீனாதான்.. எதற்கு தெரியுமா?.. பரபரப்பு தகவலை அளித்த மத்திய அமைச்சர்
பெங்களூர்: நம்மை அச்சுறுத்தவும் எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கவும் கொரோனா வைரஸை சீனா உருவாக்கியது என மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவியது. தற்போது உலகளவில் அதன் பாதிப்பு 90 லட்சத்தை தாண்டியது, பலி எண்ணிக்கையோ 5 லட்சத்தை நெருங்கிவிட்டது. இந்த நோய்க்கு தடுப்பு மருந்து ஏதும் இல்லாததால் உலக நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் இந்த வைரஸ் சீனாவில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது என்றும் இது சீன வைரஸ் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டை கூறி வருகிறார்.
கொரோனாவுக்கு மருந்துன்னு விளம்பரம் செய்தால்... ராம்தேவுக்கு மகாராஷ்டிரா அரசு பகிரங்க எச்சரிக்கை
விசாரணை
மேலும் கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்தும் அவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வைரஸால் இன்று 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி சீனாவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அச்சுறுத்தல்
அவர் கூறுகையில் மக்கள் கொரோனாவுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க நாட்டு மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கொரோனா வைரஸை யார் உருவாக்கினார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது நம்மை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
சுகாதாரம்
எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. அதை யார் செய்தது என்று நமக்கு தெரியும். கொரோனாவுடன் நாம் வாழ பழக வேண்டும். நாம் எதற்காகவும் அச்சப்படக் கூடாது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சுகாதாரமான முறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
எல்லையில் பதற்றம்
அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ கூறுகையில் உண்மையான வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் காப்பாற்ற சீனா தவறிவிட்டது. கொரோனா வைரஸ் குறித்து உண்மையை சீனா மறைக்கிறது என தெரிவித்திருந்தார். இந்தியாவும் சீனா எல்லையில் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.