இறுதி அஞ்சலி செலுத்த குவியும் மக்கள்.. திணறும் போலீஸ்.. 'காபி கிங்' சித்தார்த்தா மறுபக்கம்!
Recommended Video
பெங்களூர்: 50,000 பேருக்கும் மேல் வேலை வாய்ப்பு வழங்கியதோடு, நாடு முழுக்க தென் இந்தியாவின் பிரபல உணவு பழக்கமான காபியை கொண்டு சேர்த்த சித்தார்த்தா இன்று அனைவரையும் துயரில் ஆழ்த்தியுள்ளார்.
கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்த மாவட்டங்கள் மலநாடு என்று அழைக்கப்படும். அப்படியான ஒரு மாவட்டம்தான் சிக்கமகளூரு.
ஹாசன், சிவமொக்கா, குடகு போன்றவையும் மலை மாவட்டங்கள். இவை அனைத்துமே காபி விளைச்சலுக்கு பெயர் பெற்றவை. ஊட்டி போன்ற அதிக குளிர் இல்லாமல் அதே நேரம், இதமான தட்பவெப்பம் இங்கு நிலவுவது காபி பயிருக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி கொடுத்தது.
சித்தார்த்தாவும், காபி தோட்ட குடும்பம் ஒன்றில் பிறந்தவர்தான். அழகிய மலைகள், நீர்வீழ்ச்சிகள், காபி தோட்டங்கள் மற்றும் பிற தோட்டங்களுக்கு புகழ் பெற்ற இப்பிராந்தியத்தில் இவரது இளமை காலம் மகிழ்ச்சியோடு கழிந்தது. சித்தார்த்தாவின் குடும்பம் 130 ஆண்டுகளாக காபி செடி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதால், இயல்பாகவே காபி மணத்தோடு பிறந்து வளர்ந்தவர்.
காபி மன்னன்
இந்தியாவின் காபி மன்னராக அறியப்பட்ட சித்தார்த், 1996ல் பெங்களூரில் முதல் கபே காபி டே அவுட்லெட்டை தொடங்கினார். பரபரப்பான பிரிகேட் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு அமர்ந்து காபி சாப்பிட ரூ.60 வசூலிக்கப்பட்டது. பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவியத் தொடங்கிய காலகட்டம் அது என்பதால், இவரது பிசினசும் சூடுபிடித்தது.
50,000 வேலை வாய்ப்பு
அன்று முதல் இன்றுவரை, காபி டே குழும் பெருமளவில் விரிவடைந்துள்ளது. இன்று நாடு முழுக்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரது கபே காபி டே நிறுவனத்தால் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அதில் கணிசமானோர் மலநாடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். காபி அருந்தும் பழக்கத்தை நாடு முழுக்க பரவலாக்கி, தனது பகுதி மக்கள் காபி தோட்டத்தால் அதிக லாபம் பெறவும் ஒரு வகையில் சித்தார்த் காரணம்.
காபி பிரியர்கள்
"இந்தியாவில் காபி பயன்பாடு மற்றும் காபி அருந்தும் பழக்கம் அதிகரித்ததற்கு சித்தார்த்தா பெரும் காரணமாக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் காபி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி சந்தை மற்றும் காபி சந்தையில் பொதுவாக நிலவும் சமச்சீரற்ற தன்மையால் பாதிப்படைந்தது வெகுவாக மாறியது அவரால்தான்,'' என்று பிபிசியிடம் சித்தார்த்தா குறித்து நினைவுகூர்ந்துள்ளார் இந்திய காபி போர்ட் அமைப்பின் துணை தலைவரான டாக்டர் எஸ் எம் காவேரப்பா.
பஞ்சாப்பிலும் காபி தேவை
"பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மக்கள் தங்கள் காலை உணவில் தேநீருக்கு பதில் காபி அருந்த வேண்டும் என்று எனது தொழில் கூட்டாளி மல்ஹோத்ரா விரும்பினார்," என்று சித்தார்த்தா ஒருமுறை செய்தியாளர் ஒருவரிடம் தெரிவித்தார். அநேகமாக கூச்ச சுபாவம் கொண்ட சித்தார்த்தா அளித்த ஒரு சில பேட்டிகளில் அதுவும் ஒன்றாக இருக்க வேண்டும்.
நட்பு
சித்தார்த் பிறந்த கிராமத்தில் வசிப்பவரும், நீண்டகாலமாக அவருக்கு அறிமுகமானவருமான ஹாலப்பா கவுடா, இப்படி சொல்கிறார். "ஹாசன், சிக்கமகளூரு, சிவமோகா, குடகு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் வேலை வழங்கியுள்ளார். இந்த துக்கச் செய்தியைக் கேட்டு இன்று பலர் கூடியுள்ளனர். நாங்கள் அனைவரும் அவருக்காக பெரிதும் கவலைப்படுகிறோம். சித்தார்த்துக்கு முன்பே, அவரது தந்தை பல ஏக்கர் பரப்புள்ள காபி தோட்டங்களை நிர்வகித்து வந்தார். சித்தார்த்தா கடந்த சில பத்தாண்டுகளாக வணிகத்தை நிர்வகித்து வருகிறார். நட்பு மற்றும் மிகுந்த பணிவுடன் எங்களுடன் பழகினார். " என்றார்.
வித்தியாசம்
"அவரைப் போல யாரும் கனவு கண்டதில்லை. அந்த காலகட்டத்தில், காபி உயர்ந்த விலையில் விற்கப்பட்டது, ஆனால் அவர் காபியை கொண்டு சில்லறை விற்பனை மற்றும் ஒரு பிராண்டை உருவாக்க நினைத்தார். ரியல் எஸ்டேட் அல்லது சுற்றுலாவில் பலரும் முதலீடுகள் செய்து கொண்டு இருந்தபோது, இது போன்று யாரும் காபி மற்றும் மென்பொருள் வணிகத்தில் முதலீடு செய்யவில்லை. அவர் ஒரு நல்ல ஊக்கமாக இருந்தார். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்" என்கிறார், சித்தார்த்தை நன்கு அறிந்த அருண் என்பவர்.
அபிமானம்
சித்தார்த் உடல் வைக்கப்பட்டுள்ள அவரது சொந்த ஊரில், பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த குவிந்து வருகிறார்கள். காவல்துறையினர் தடுப்புகளை குவித்து மக்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு நிலைமை இருக்கிறது எஎன்பது சித்தார்த் மீது மக்கள் வைத்துள்ள அபிமானத்திற்கு ஒரு சான்று ஆகும்.