முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு
பெங்களூர்: சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி 27-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யுமாறு கர்நாடகா சிறைத் துறை நிர்வாகத்தில் சசிகலா விண்ணப்பித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும்.
தற்போது சசிகலா இந்த நான்கரை ஆண்டுகளில் 43 மாத காலம் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார். எனவே 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் என்றால் அவரது தண்டனை காலத்தில் 129 நாட்கள் குறைக்கப்படும். இது முழுக்க முழுக்க நன்னடத்தை கொண்ட குற்றவாளிக்கே பொருந்தும்.
அதிலும் இந்த சலுகையானது குற்றவாளிகளின் உரிமை அல்ல. இது சிறை அதிகாரிகளின் விருப்பமாகும். சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் முன்கூட்டியே விடுதலை செய்ய பரப்பன அக்ரஹாச மத்திய சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளார்.
அதில் முந்தைய தீர்வை மறுபரிசீலனை செய்யுமாறும் அவர் கோரியுள்ளார். இந்த சிறைத் துறை தற்போது சசிகலாவின் விண்ணப்பத்தை சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் இந்த விவகாரத்தில் இன்னும் எந்த அழைப்பும் விடுக்கவில்லை. சசிகலா ஏற்கெனவே நவம்பர் மாதமே அபராதத் தொகையான ரூ 10 கோடியை செலுத்திவிட்டார்.