டிகே சிவகுமார் கைதுக்கு எதிராக போராட்டம்; மோடி- அமித்ஷாவுக்கு ஒக்கலிகா சங்கம் எச்சரிக்கை!
Recommended Video
பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பெங்களூருவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கண்டன பேரணி நடத்தினர். இதில் பங்கேற்ற ஒக்கலிகா சங்க நிர்வாகிகள், தங்களது சமூகத் தலைவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டால் தக்க பதிலடி தருவோம் என எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதே வழக்கில் டி.கே.சிவக்குமாரின் மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு தேசிய கல்லூரி மைதானத்தில் சிவக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பிரமாண்ட போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ஒக்கலிகா சங்கத்தினர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ண பைரே கவுடா, சவும்யா ரெட்டி, தினேஷ் குண்டுராவ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சாலுவாரய ஸ்வாமி, நரேந்திர ஸ்வாமி, பாலகிருஷ்ணா, முன்னாள் எம்.பி. வி.எஸ். உக்ரப்பா உள்ளிட்டோர் இப்பேரணியில் உரையாற்றினர். இதில் பேசிய ஒக்கலிகா சங்க நிர்வாகிகள், தங்களது சமூகத் தலைவர்களை மோடி, அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து குறிவைத்தால் உரிய பதிலடி கொடுப்போம் என எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய கல்லூரியில் இருந்து சுதந்திர பூங்கா நோக்கி அனைவரும் பேரணியாக சென்றனர். பெங்களூரு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி செல்வதால் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இப்பேரணியை ஒட்டி அசம்பாவிதங்களை தடுக்க கர்நாடகா சிறப்பு ரிசர்வ் போலீஸ் பட்டாலியன் மினர்வா சர்க்கிள் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்தம்பித்தது பெங்களூரு
காங்கிரஸ் மற்றும் ஒக்கலிகா சங்கத்தினர் இணைந்து பெங்களூருவின் முக்கிய வீதிகளில் நடத்திய இப்பேரணியால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பெங்களூரு நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் இப்பேரணி நடைபெற்றது.
ஆளுநரிடம் ஒக்கலிகா சங்க நிர்வாகிகள் மனு
பெங்களூரு நகரின் பிரதான வீதிகளை கடந்து ஆளுநர் மாளிகை முன்பாக இப்பேரணி நிறைவடைந்தது. பின்னர் ஒக்கலிகா சங்க நிர்வாகிகள் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர். அதில், மூத்த காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மீது மத்திய பாஜக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறது. சிவக்குமாருக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையை தவறாக பயன்படுத்தப்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.