வேலை கேட்டு முற்றுகையிட்ட தொழிலாளர்கள்.! வசைபாடி விரட்டியடித்த கர்நாடக முதல்வரால் பரபரப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் கிராம தரிசனம் நிகழ்ச்சிக்கு சென்ற குமாரசாமியை, தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராடினர். தன்னை முற்றுகையிட்ட தொழிலாளர்களை பார்த்து கோபமுற்ற குமாரசாமி, மோடிக்கு ஓட்டு போட்டு விட்டு என்னிடம் வந்து இப்போது வேலை கேட்கிறீர்களா என கடுமையாக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரெய்ச்சூர் மாவட்டத்தில் கிராம தரிசனம் நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில முதல்வர் குமாரசாமி, பேருந்தில் பயணம் செய்தார். அப்போது ஒய்டிபிஎஸ் மற்றும் துங்கபத்ரா அணை பகுதியில் தற்காலிக தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தங்களது கோரிக்கையை குமாரசாமியிடம் தெரிவிக்க வந்தனர்.
அவர்களை குமாரசாமியிடம் நெருங்க விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், முதல்வர் குமாரசாமியை முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸார், பேரிகேட் போட்டு தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அதனையும் தள்ளிக் கொண்டு முதல்வரை முற்றுகையிட தொழிலாளர்கள் முயன்றனர்.
நிலைமையை சமாளிக்க காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து குமாரசாமிக்கு எதிராக தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த குமாரசாமி ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பார்த்து, தேர்தலில் மட்டும் மோடிக்கு வாக்களிக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு வேலை வேண்டுமென்றால் மட்டும் என்னிடம் வந்து கேட்பீர்களா என்ன நியாயம் இது என ஆவேசமாக கத்தினார்.
அமமுகவை விட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மை இல்லை: பழனியப்பன்
நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் கரேகுட்டே கிராம நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். நான் பேருந்தில் செல்வதற்கு வழிவிடப் போகிறீர்களா இல்லை தடியடி நடத்த சொல்லட்டுமா என, தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசினார்.
குமாரசாமியின் இந்த மிரட்டல் பேச்சு தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் துங்கபத்ரா அணை நிர்வாகம் எங்களை வேலையை விட்டு நீக்கி விட்டது. எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என கெஞ்சாத குறையாக குரல் எழுப்பினார்.
ஆனால் எதையுமே காதில் வாங்காத குமாரசாமி கோபமுடன் அடுத்த கிராம தரிசனம் நிகழ்ச்சியில் பங்கேற்க, கரேகுட்டே கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். ஒரு மாநில முதல்வரே தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளதற்கு, பல்வேறு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.