மோடிக்கு மீண்டும் வாக்களியுங்கள்... வைரலாகும் திருமண அழைப்பிதழ்
பெங்களூரு : விரைவில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில், பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே, எங்களது திருமணத்திற்கு தாங்கள் அளிக்கும் பரிசாக கருதுவதாக கர்நாடக தம்பதி அச்சடித்துள்ள திருமண அழைப்பிதழ், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் தேவாங்கிரே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மற்றும் ரேகா. இவர்களுக்கு வரும் பிப்ரவரி 8 ம் தேதி, திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக, உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினருக்கு திருமண அழைப்பிதழை விநியோகித்து வருகின்றனர்.இந்த திருமண அழைப்பிதழ், தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடியின் திட்டங்கள்
திருமணத்திற்கு வருபவர்கள், வரும் மக்களவை தேர்தலில், பிரதமர் மோடிக்கு மீண்டும் வாக்களிப்போம் என்ற வாக்குறுதியை, தாங்கள் பரிசாக கருதுவதாக, மணமக்கள் அந்த திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர். இதனை தவிர, பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
குஜராத் தம்பதியர்
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த யுவராஜ் - சாக்ஷி தம்பதி, ரபேல் போர் விமானங்கள் விவகாரத்தில் மோடி அரசின் சரியான செயல்பாடு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை, தங்களது திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தனர்.
பாராட்டு கடிதம்
இந்த திருமண அழைப்பிதழ், பிரதமர் மோடியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், அவர், புதுமண தம்பதியினரை பாராட்டும் வகையில், பாராட்டு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பரிசு வேண்டாம்
இதே போல், மங்களூரில் நடந்த ஒரு திருமண நிகழ்விற்கு அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கையில், திருமணத்திற்கு வருபவர்கள் பரிசு பொருட்கள் எதையும் எடுத்து வர வேண்டாம் என்றும், 2019 மக்களவை தேர்தலின் போது மோடிக்கு ஓட்டு போடுவதே திருமண பரிசு என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.