வாவ்.. இங்க பாருங்க க்யூட் 'பொண்ணு..' பேரு வயோமித்ரா.. விண்வெளிக்கு போகப்போகுது.. இஸ்ரோ அசத்தல்
பெங்களூர்: அவளால் பேச முடியும். அவளால் மற்ற மனிதர்களை அடையாளம் காண முடியும். அவர்கள் விண்வெளியில் என்ன செய்வார்களோ, அதை அப்படியே அவளால் பிரதிபலிக்க முடியும். அவ்வளவு ஏன்? அவளால் உரையாடல்களை நடத்தவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். ஆனால் அவள் பெண் அல்ல.
நாம் அவள் என குறிப்பிட்டது, 'வயோமித்ரா'. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) உருவாக்கிய விண்வெளி மனித ரோபோ இது. வயோமித்ராவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திட்டத்தின் சோதனை ஓட்டம்தான் இந்த ரோபோ. மனிதனை முதலில் அனுப்பி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது? எனவேதான், மனித ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
வயோமித்ரா, அப்படியே விண்வெளி வீரர்களின் செயல்பாட்டை "பிரதிபலிக்க" முடியும். மேலும் அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும்.
ரஜினிக்கு காங்கிரஸ் கண்டனம்... வகுப்புவாத சக்திகளுக்கு இரையாகி விடாதீர்- கே.எஸ்.அழகிரி
இஸ்ரோ அறிமுகம்
பெங்களூரில், இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் வயோமித்ரா ரோபோவை இஸ்ரோ அறிமுகம் செய்தது. "ஹாய், நான் வயோமித்ரா. பாதி மனித உருவத்தின் முதல் முன்மாதிரி" என்று செய்தியாளர்களை அந்த ரோபோ வரவேற்று அசத்தியது. இஸ்ரோ விஞ்ஞானி சாம் தயால் இதுபற்றி கூறுகையில், "வயோமித்ராவுக்கு கால்கள் இல்லாததால் அரை மனித உருவம் கொண்டது என்று அழைக்கிறோம். இதை பக்கவாட்டாகவும், முன்னோக்கியும் மட்டுமே வளைக்க முடியும். இது விண்வெளியில், சில சோதனைகளை மேற்கொள்ளும். எப்போதும் இஸ்ரோ கட்டளை மையத்துடன் தொடர்பில் இருக்கும்" என்றார்.
|
ககன்யான்
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது 2019 சுதந்திர தின உரையில் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் லட்சியத் திட்டத்தை அறிவித்தது நினைவிருக்கலாம். இதற்கு முன்பும் இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு பயணித்துள்ளார். அவர் பெயர், விங் கமாண்டர், ராகேஷ் சர்மா. ஆனால், அவர் ரஷ்ய விண்கலத்தில் ஒரு விண்வெளி வீரராக பயணித்தார். ககன்யான் திட்டம் அப்படி அல்ல. இது வேற லெவல். எல்லாமே இந்தியா, இந்தியர்கள்தான் என்பது இதன் சிறப்பு.
திட்டம்
இந்தியாவிலிருந்து இந்திய ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்திய விண்கலத்தில் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த திட்டம். இந்திய விமானப்படையின் 4 விமானிகள் ஏற்கனவே ககன்யான் திட்டத்தின்படி விண்வெளி செல்லும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள். அதேசமயம், விண்வெளியில் பறக்கும் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் பயிற்சி பெற இந்திய விமானப்படையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரான்சுக்கு அனுப்பப்படுவார்கள்.
சோதனை பயணம்
2022க்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பயணத்தைத் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக, இரண்டு முறை ஆளில்லா பயணத்தை சோதனை முறையில் நடத்த உள்ளது இஸ்ரோ. ஒன்று இந்த ஆண்டு டிசம்பரிலும், மற்றொன்று 2021, ஜூன் மாதத்திலும் நடைபெற உள்ளது. இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்க திறன் பெற்ற அமைப்பு என்பதை இந்த இரு பயணங்களும் உலகுக்கு பறைசாற்றும். மேலும், இஸ்ரோவுக்கும், மனிதர்களை பயமின்றி அனுப்பும், நம்பிக்கையை ஊட்ட இது உதவும் என்பதால் வயோமித்ரா ரொம்ப முக்கியமான பொண்ணு.
பயணம்
ஆளில்லா விண்வெளிப் பயணங்களின்போது, வயோமித்ரா அதில் ஒரு பகுதியாக இருக்கும். விஞ்ஞானிகள் எப்படி செயல்படுவார்களோ, அதேபோல, வயோமித்ரா செய்து காட்டும். 2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கான, வரலாற்றுப் பயணத்தின் போது மூன்று இந்திய விண்வெளி வீரர்களுடன் வயோமித்ரா செல்வாரா? என்றால், அது தெரியவில்லை. ஆனால், இன்று செய்தியாளர்களிடம் 'பேசும்போது', "விண்வெளி வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்" என்று வயோமித்ரா தனது கீச்சுக்குரலில் நம்பிக்கையுடன் பதிலளித்தது.