எப்போதும் தூங்கும் கும்பகர்ணனா நீங்கள்.. 10 லட்சம் சம்பளத்துல வேலை ரெடியாக இருக்கு..என்ஜாய் பண்ணுங்க
பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த வேக்ஃபிட் நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் தூங்குவதற்கான இன்டர்ன்ஷிப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுவாக வேலைக்குச் செல்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பவர்களை. 'நீ எல்லாம் எங்க உருப்பட போற. ஒழுங்கா வேலைக்கு போ' என்று சகட்டுமேனிக்கு அனைவருமே திட்டித் தள்ளுவார்கள். ஆனால் தூங்குவதே ஒரு வேலையாக இருந்தால்? அதற்கு ஒரு லட்சம் சம்பளமும் கொடுத்தால் எப்படி இருக்கும்.
அட! ஆமாங்க.. பெங்களூருவைச் சேர்ந்த வேக்ஃபிட் என்ற நிறுவனம் தூங்குவதற்கான இன்டர்ன்ஷிப் ஒன்றை அறிவித்துள்ளது 100 நாட்கள் இருக்கும் இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்வு செய்யப்படும் அனைவருக்கும் ஒரு லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் வேக்ஃபிட் அறிவித்துள்ளது.
தூங்கும் வேலை
இது குறித்து வேக்ஃபிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் சைதன்யா ராமலிங்கெகவுடா கூறுகையில், "2020ஆம் ஆண்டு அனைவருக்கும் கடினமான ஆண்டாக இருந்தது. கொரோனா தொற்று காரணமாக அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வழக்கமான நடைமுறைகள் பெரியளவில் மாறியுள்ளன. தூக்க சுழற்சி என்பது முற்றாக மாறியுள்ளது. ஆரோக்கியத்தின் முக்கிய தூணான தூக்கத்தை ஊக்குவிக்க இந்த இன்டர்ன்ஷிப்பை அறிவித்துள்ளோம். இது அனைவருக்கும் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தைத் தரும்" என்றார்.
தகுதி என்ன
மேலும், இந்த இன்டர்ன்ஷிப்புக்கு அப்ளே செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் கலந்துகொள்பவர்கள் தூக்கத்திற்கு உகந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். இரவு நீண்ட நேரத்திற்கு பின், உணவு எடுத்துக்கொள்ளக் கூடாது. காபி மற்றும் ஆல்கஹாலை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி முறை மற்றும் தூக்கம் குறித்து புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேகரிக்கப்படும் தகவல்கள்
அவர்கள் Wakefit.co mattress மற்றும் தூக்கத்தைக் கண்காணிக்கும் டிராக்ர் வழங்கப்படும். அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் தகவல்கள் அனைத்தும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெளிவாகப் போடப்படும் என்றும் அதைப் படிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்றுவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 லட்சம் ரூபாய்
இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த இன்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 100 நாட்கள் இருக்கும் இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்வு செய்யப்படும் அனைவருக்கும் ஒரு லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். மிகச் சிறப்பாகத் தூங்கி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.