தண்ணீர் தருவோம் என்று கூறி விட்டு பல்டி அடித்த கர்நாடகா.. காவிரி நீரைத் தர மறுத்து அடாவடி!
பெங்களூரு: தற்போதை நிலவரப்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க இயலாது என, கர்நாடக மாநில நீர் பாசனத்துறை அமைச்சரான டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
காவிரி நீரை தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதை கண்காணிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 அமைப்புகளிலும் 4 மாநிலங்களும் தங்கள் சார்பாக தலா ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 3 முறை கூடியுள்ளது.
இதில் மூன்றாவது முறையாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமை தாங்கினார். இதில், நான்கு மாநிலங்களையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகள் குறுவை சாகுபடிக்கு ஏதுவாக காவிரியிலிருந்து ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மே மாதம் முடிவதற்குள் வழங்க வேண்டிய 2 டிஎம்சி நீரையும் கர்நாடகம் வழங்க உத்தரவிட கோரினர்.
ஆனால் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகம், தங்கள் மாநிலத்தில் தற்போதுதான் பருவமழை துவங்கியுள்ளது. எனவே காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தற்போது நீர் திறக்க முடியாது என வாதிட்டனர். கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரித்த மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 9.2 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
ஆனால் வழக்கம் போல இந்த உத்தரவையும் காற்றில் பறக்க விட்டது கர்நாடக அரசு. ஆணையம் உத்தரவிட்டபடி இதுவரை காவிரியிலிருந்து நீர் தமிழகத்திற்கு திறக்கப்படவில்லை. கர்நாடகத்தின் இச்செயலுக்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார், தங்கள் மாநிலத்தில் உள்ள கபினி, கேஆர்எஸ், ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகள் எல்லாவற்றையும் சேர்த்து, 13.93 டிஎம்சி தண்ணீர் தான் எங்களிடமே கையிருப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே விரைவில் மழை பெய்து அதன் மூலமாக கர்நாடகத்தின் முக்கிய அணைகளில் நீர்மட்டம் அதிகரிக்குமானால் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் காவிரியிலிருந்து திறக்கப்படும் என கூறியுள்ளார்.
வறட்சிகால நீர் பங்கீட்டு முறையின் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் என காவிரி ஆணையத்திடம் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மாநில நீர் பாசனத்துறை அமைச்சரான டிகே சிவகுமார் கூறியுள்ளார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.