இதே நிலை தொடர்ந்தால் நதிகளின் நீர் விஷமாகும்.! எச்சரிக்கும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம்
Recommended Video
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாயும் காவிரி நதி உட்பட 5 நதிகளின் தண்ணீர், பொதுமக்கள் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத வகையில் உள்ளதாக அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நதிகளில் பாயும் தண்ணீரின் தரம் குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் போது நதி நீரின் தரம் ஏ, பி, சி, டி, இ என 5 பிரிவுகளாக தரம் பிரிக்கப்படுகிறது. இதில் ஏ பிரிவில் வகைப்படுத்தப்படும் நீர் மட்டுமே பொதுமக்கள் குடிக்க பயன்படுத்த முடியும். பி பிரிவில் வகைப்படுத்தப்படும் தண்ணீரை, சுத்திகரித்து பின்னர் குடிப்பதற்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
சி பிரிவில் வகைப்படுத்தப்படும் தண்ணீர் மீன்கள் வளர்ப்பிற்கும், டி பிரிவில் வகைப்படுத்தப்படும் தண்ணீரை வன விலங்குகள் குடிக்கவும் பயன்படுத்த முடியும். இ பிரிவு தண்ணீர் வேளாண் மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அதன்படி நடப்பாண்டு கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வு அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் காவிரி, கடபிரபா, மலபிரபா, பத்ரா மற்றும் கிருஷ்ணா ஆகிய 5 நதிகள் மிகவும் மாசடைந்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், பொதுமக்கள் கொட்டும் கழிவுகள் மூலம் மேற்கண்ட நதிகள் தொடர்ந்து மாசடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில், நதிகளில் பாயும் தண்ணீரானது விஷத்தன்மையாகிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர லட்சுமண் தீர்த்தா, கபினி, காளி, யகசி, காகினா ஆகிய நதிகள் பி பிரிவில் உள்ளதால், அந்த நதிகளில் கிடைக்கும் தண்ணீரை சுத்திகரித்து மட்டுமே குடிக்க முடியும். அர்காவதி, துங்கபத்ரா, ஷிம்ஷா, துங்கா நதிகள் கடந்த ஆண்டு சி பிரிவில் இருந்தன. நடப்பாண்டில் இவை டி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
மலபிரபா நதி கடந்த ஆண்டு சி பிரிவில் இருந்தது, இந்த ஆண்டில் அந்நதி டி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீர் சிலஇடங்களில் சி பிரிவிலும், சில இடங்களில் டி மற்றும் இ பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
குடகு மாவட்டம் குஷால்நகரிலுள்ள காவிரி, தர்மஸ்தலாவில் உள்ளநேத்ராவதி, கங்காவதியில் உள்ள துங்கபத்ரா உள்ளிட்ட நதிகள் பி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
முக்கிய நதிகளில் கிடைக்கும் தண்ணீர் ஆண்டுதோறும் தன்மை மாறுவதற்கு, நதிகளில் கலக்கும் கழிவுகள் காரணமாக உள்ளதால் அதனை தடுக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, அரசுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.