நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் புதிய அரசு அமைய குமாரசாமி வழி விட வேண்டும்.. எடியூரப்பா
பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் வரும் திங்கட்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் கூட அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான அரசு திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்-களை அக்கட்சிகள் தத்தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் அணி மாறாமல் இருக்க பாஜக, காங்கிரஸ், மஜத கட்சி எம்எல்ஏ-க்கள் தனித்தனி சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மஜத எம்எல்ஏ-க்கள் நந்தி ஹில்ஸ் பகுதியிலும், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 50 பேர் புறநகரிலுள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே போல பாஜக எம்எல்ஏ-க்கள் இருவேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை கர்நாடக பேரவை கூட உள்ள நிலையில், அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானம் திங்கட்கிழமையன்றே எடுத்து கொள்ளப்படுமா, அல்லது வேறு நாளில் நடக்குமா என்பதை சபாநாயகரே தீர்மானிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் திங்கட்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபம் ஒன்றும் இல்லை என குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை வரை காத்திருப்போம், அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் முழுஒத்துழைப்பு கொடுப்போம். வாக்கெடுப்பின் இறுதியில் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால், குமாரசாமி முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும்.
அதே போல புதிய அரசு பதவியேற்க வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கர்நாடக மாநில மக்கள் கூட்டணி அரசின் மீது வெறுப்பில் உள்ளனர். இவர்களின் ஆட்சி காலத்தில் வளர்ச்சி என்பதே இல்லை. கர்நாடக மாநிலம் பின்தங்கி விட்டது என சாடினார் எடியூரப்பா.