சண்டை போட ஆசையில்லை.. நாங்கள் சகோதரர்கள்.. கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் சொல்றதை கேளுங்க!
மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில், அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை ஆணையம் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்தது. இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில், மேகதாது அணை குறித்து பெங்களூருவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், எவ்வளவு தடைகள் வந்தாலும் அணையை கட்டுவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியதோடு, பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது: தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை.
மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம். கர்நாடக மக்களுக்கு குடிநீர் தரவேண்டியது எங்கள் கடமை. தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை. நாங்கள் சகோதரர்கள்.
மேலும், மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும். இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம் என்றும் கூறினார்.