எம்எல்ஏக்கள் யாரும் பாஜகவில் சேரவில்லை.. ஆட்சி கவிழாது.. கர்நாடக முதல்வர் குமாரசாமி புது தகவல்!
காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 3 பேர் பாஜகவில் சேர போவதாக வெளியான தகவல் அனைத்தும் பொய் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 3 பேர் பாஜகவில் சேர போவதாக வெளியான தகவல் அனைத்தும் பொய் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் தற்போது புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி அங்கு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் கமலா என்று பாஜக இதற்காக வேலை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே சிவக்குமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இவர்கள் மூன்று பேரும் பாஜக கட்டுப்பாட்டில், மும்பையில் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறினார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது இந்த புகார்கள், செய்திகள் அனைத்திற்கும் அம்மாநில முதல்வர் குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதில், எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சொந்த வேலையாக மும்பை சென்று இருக்கிறார்கள். அவர்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இல்லை.
எங்கள் ஆட்சியை பாஜக கவிழ்க்க பார்க்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை. எங்களிடம் முழு பெரும்பான்மை உள்ளது. பாஜக எவ்வளவு முயன்றாலும் எங்கள் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.