சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
பெங்களூரு: கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் பிறப்பித்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக ஜேடிஎஸ் கட்சியின் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
ஒரு சுயேட்சை உட்பட 17 அதிருப்தி எம்.எல்.ஏக்களை சபாநாயகர் ரமேஷ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் 3 எம்.எல்.ஏக்களும் இன்று 14 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஜேடிஎஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. விஸ்வநாத் கூறியதாவது:
நாங்கள் கொடுத்த ராஜினாமா கடிதங்களை பரிசீலிக்காமல் தகுதி நீக்க உத்தரவை சபாநாயகர் பிறப்பித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி கொடுத்த புகார்களின் அடிப்படையில் மட்டுமே சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
எடியூரப்பாவுக்கு வேலையை ஈஸியாக்கிய சபாநாயகர்.. 17 பேரை தகுதி நீக்கம் செய்தது ஏன்?.. பரபர பின்னணி!
எங்களுக்கும் கூட சட்டம் தெரியும். கூட்டணி அரசு மீதான அதிருப்தியில்தான் நான் பதவியை ராஜினாமா செய்தேன்.
என் ராஜினாமா கடிதத்தை ஏன் பரிசீலனை செய்யவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளோம்.
இவ்வாறு விஸ்வநாத் கூறினார்.
இதனிடையே பாஜகவின் கோவிந்த் காரஜோல் கூறுகையில், எம்.எல்.ஏக்கள் தன்னிச்சையாக ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் பரிசீலிக்கவில்லை.
அரசியல் அழுத்தங்களுக்காக தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் சபாநாயகர். இதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம் என்றார்.