கன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி
Recommended Video
பெங்களூர்: கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில், சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தேசிய மொழியாக அறிவிக்கும் தகுதி இந்திக்கு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த பேச்சிற்கு, தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
திமுக ஒரு படி மேலே போய், பெரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாஜக ஆளக்கூடிய கர்நாடக மாநிலத்தின் முதல்வரும், மூத்த தலைவருமான எடியூரப்பா, இன்று வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் செய்தியில், இந்த நாட்டில் அனைத்து மொழிகளும் சரி சமமானவை. அதேநேரம் கர்நாடகாவை பொருத்த அளவில், கன்னடம் என்பது முதன்மை மொழி.
All official languages in our country are equal. However, as far as Karnataka is concerned, #Kannada is the principal language. We will never compromise its importance and are committed to promote Kannada and our state's culture.
— CM of Karnataka (@CMofKarnataka) September 16, 2019
கன்னட வளர்ச்சி மற்றும் இந்த மாநிலத்தின் கலாச்சார வளர்ச்சி ஆகியவற்றில் ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் மட்டுமல்லாது பாஜகவின் தேசிய தலைவராகவும் பதவி வகிப்பவர் அமித்ஷா. அவர் இந்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், எடியூரப்பா, கன்னடத்திற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.