கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி இல்லை: தேவகவுடா திட்டவட்டம்
பெங்களூரு: கர்நாடகாவில் ஜேடிஎஸ் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்காது என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதில் அதிக இடங்களை காங்கிரஸ்-ஜேடிஎஸ் வென்றால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழும் வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜனநாயகத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொள்ளும் என்றார். அதாவது பாஜக அரசு கவிழ்ந்தால் ஜேடிஎஸ் உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயங்காது என்பதற்கான சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, இதை திட்டவட்டமாக மறுத்தார். மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க மாட்டோம் என்றார்.
ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, டிசம்பர் 5-ந் தேதிக்குப் பிறகு அரசியல் மாற்றங்கள் ஏற்படும். தேர்தலை எதிர்கொண்டிருக்கும் 15 தொகுதி மக்கள் தான் அரசியலில் கிங் மேக்கர்கள் யார் என்பதை தீர்மானிப்பார்கள். நான் கிங் மேக்கர் அல்ல என்றார்.