"ராங் ரூட்டில் பெங்களூர்.." வாக்கிங் போனால், வாகனத்தில் தனியாக போனால் மாஸ்க் தேவையில்லை- மாநகராட்சி
பெங்களூர்: கொரோனா நோய் தடுப்பு விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளும் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், பெங்களூர் மாநகராட்சி மட்டும் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
Recommended Video
முக கவசம் அணிந்தால், கொரோனா பரவல் கட்டுப்படுகிறது என்று பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பும் இதையே திரும்பத் திரும்ப சொல்லும் நிலையில், பெங்களூர் மாநகராட்சி மட்டும் வேறு ரூட்டில் செல்கிறது.
வாக்கிங் செல்வோர், பைக்கில் தனியாக செல்வோர் என பல பிரிவினருக்கு, முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32 லட்சத்தை தாண்டியது- 60 ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்புகள்
நடவடிக்கை
முக கவசம் அணியாதவர்களிடமிருந்து பெங்களூர் மாநகராட்சி அபராதம் வசூலித்து வந்தது. இதுவரை 83 ஆயிரத்து 673 பேரிடம், 1 கோடியே 60 லட்சம் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், தனியாக காரில் சென்றபோது, முக கவசம் அணியவில்லை என்பதற்காக வழிமறித்து அபராதம் விதிக்கிறார்கள். பைக்கில், தனியாக, அதுவும் ஹெல்மெட் அணிந்தபடி செல்லும்போது, முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கிறார்கள் என்றெல்லாம் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வரத் தொடங்கின. இந்த நிலையில்தான் பெங்களூர் மாநகராட்சி புதிதாக ஒரு முடிவை அறிவித்துள்ளது.
முகக் கவசம் தேவையில்லை
பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் இதுபற்றி கூறுகையில், காரை ஒருவர் தனியாக ஓட்டிச் செல்லும்போது முகக்கவசம் அணிய தேவையில்லை. அதேபோன்று பைக்கில் ஒரு நபர் மட்டும் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டாம். கார் அல்லது இரு சக்கர வாகனம் ஆகியவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயணிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம். மேலும், ரன்னிங், ஜாகிங் செல்வோர்கள் அல்லது வாக்கிங் செல்வோர், முகக் கவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சாலையில் துப்புவது
முகக் கவசம் அணியும் பழக்கம் இப்போது தான் பெரும்பாலான மக்களுக்கு வழக்கமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இது போன்ற சலுகைகள் வழங்கியிருப்பது மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு.. பைக்கில் தனியாக செல்லும் ஒரு நபர் முக கவசம் அணியாமல் பயணிக்க அனுமதி கொடுத்துள்ளதால் அவர் நினைத்த இடத்தில் சாலையோரத்தில் காரி உமிழ்ந்து விட்டு செல்ல முடியும். முக கவசம் இருந்தால் தெருவில் துப்பும் பழக்கம் குறைவதற்கான வாய்ப்பு இருந்தது. இதேபோன்று வாக்கிங் செல்வோர், ஜாகிங் செல்வோரும் முகக் கவசம் அணியாவிட்டால் கண்ட இடத்திலும் தெருவோரங்களில் எச்சில் துப்பும் வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலமாக, கொரோனா போன்ற நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் பெங்களூர் மாநகராட்சி தவறான முடிவெடுத்து விட்டதாக சுகாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
நோட்டீஸ் கிடையாது
மேலும், கர்நாடக கொரோனா நிபுணர் குழுஅரசுக்கு ஒரு முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளது. அதன்படி, வீட்டு தனிமையில் இருப்போர், கொரோனா பாதிக்கப்பட்டோர் ஆகியோரின் வீட்டுக்கு வெளியே அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுதி ஒட்டி வைப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தில் அவர்களை வித்தியாசமாக பார்ப்பதாகவும் எனவே இந்த நடைமுறையை தவிர்க்கலாம் என்றும் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
விழிப்புணர்வு
இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இவ்வாறு நோட்டீஸ் ஒட்டாத பட்சத்தில் அண்டை அயலாருக்கோ, அந்த தெருவில் வசிப்பவர்களுக்கோ, கொரோனா நோயாளிகள் அல்லது தனிமையில் இருப்போர் பற்றிய விவரம் தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் வீடுகளுக்குள் அறியாமல் சென்று புழங்க வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலமாக நோய் பரவல் இன்னும் அதிகரிக்க இது வழிவகுத்துவிடும். இப்போதே, கொரோனா பாதித்தவர்களுக்கு மாநகராட்சி எந்த உதவியும் செய்வதில்லை என புகார்கள் உள்ளது. இந்த நிலையில், சலுகைகள் அளிக்கிறேன் என்ற பெயரில், நோய் பரவலை அதிகரிக்கும் வேலையைத்தான் பெங்களூரு மாநகராட்சி செய்து வருகிறது என்கிறார்கள் பெரும்பாலான சுகாதாரத் துறை வல்லுநர்கள்.