Exclusive: பரவும் கொரோனா.. அச்சத்தில் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்களின் நடவடிக்கை என்ன? பரபர பெங்களூர்
பெங்களூர்: கொரோனா வகை வைரசால் உருவாகும், கோவிட்-19 வியாதியால் உலகமே தத்தளிக்கிறது. அந்த வகையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு இரட்டை தலைவலி. ஒன்று.. அதன் குளிர்பதமுள்ள கிளைமேட், மற்றொன்று சர்வதேச நிறுவனங்கள் அதிகம் இங்கே குவிந்து இருப்பது.
Recommended Video
சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் இங்கே அமைந்துள்ளதோடு, ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் பலரும், வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக, அவ்வப்போது சென்று வருவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
அந்த வகையில், தொற்றுநோய்கள் எளிதாக பரவக்கூடிய ஒரு இடமாக பெங்களூர் மாறிவிடுகிறது. இதற்கு முன்பு ஹெச்1என்1 போன்ற நோய்களும் அப்படித்தான் வேகமாக பரவின.
பெங்களூர் ஐடி நிறுவனங்கள்
இப்போதும், தென் இந்தியாவில், கேரளாவுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில்தான் அதிகபட்ச கொரோனா நோயாளிகள் உள்ளனர். 4 பேருமே பெங்களூரில்தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவேதான் பெங்களூரிலுள்ள ஐடி நிறுவனங்கள், இந்த விஷயத்தை ரொம்பவே சீரியசாக பார்க்கின்றன. அடுத்து என்ன என்ற யோசனையில் அனைத்து அலுவலகங்களின் ஹெச்.ஆர்.அலுவலகங்களும் பரபரப்போடு இருக்கின்றன.
வெளிநாடு
டெல் நிறுவனம், மைன்ட்ட்ரீ மைண்ட்ஸ் போன்றவற்றின் ஊழியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் அடங்குபவர். வெளிநாடு சென்று திரும்பியபோதுதான், இந்த சிக்கலில் மாட்டினர். இந்த நிலையில்தான், பெங்களூரின் களச் சூழல் எப்படி இருக்கிறது என்பது பற்றி, ஐடி நிறுவனங்களில் விசாரித்தோம். இதோ அதுகுறித்த தகவல்.
ஆரக்கிள் நிலை
ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றும், பெண் ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், அரசு எப்போது வேண்டுமானாலும், அனைத்து ஐடி நிறுவனங்களையும் வீட்டிலிருந்து வேலை பார்க்க சொல்லும் வாய்ப்பு உள்ளது. இதற்கு ஹெச்.ஆர். தரப்பில் தயாராகி வருகிறார்கள். சில டீம்களிடம் நீங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க ரெடியா என ஒரு மினி சர்வேயே நடத்திச் சென்றுள்ளனர். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில், அந்த ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது என தெரிகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. ஆனால், லேப்டாப் சார்ஜர்களை ஆபீசிலேயே வைத்துவிட்டு போக வேண்டாம். உங்களுடனேயே வைத்திருங்கள். எப்போது வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டி வருமோ தெரியாது என 1 வாரம் முன்பே அனைவருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
எல்லோருக்கும் அறிவிப்பு
ஒயிட்பீல்டு பகுதியிலுள்ள, இன்டலிசாஃப்ட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் கூறுகையில், "எங்கள் ஆபீசில் எல்லோருக்குமே ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் கொடுத்துவிட்டார்கள். ஒரு வாரம் கழித்து நிலைமை எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து, நிர்வாகம் முடிவு எடுக்கும். ஒர்க் பிரம் ஹோம் என்பது இப்போது ஐடி ஊழியர்களின் 'ப்ரிவிலேஜ்' கிடையாது. கட்டாயமாக்கப்படும் காலம் நெருங்கிவிட்டது" என்றார். இவர் இரண்டு குழந்தைகளின் தாய். இதேபோல பிளிப்கார்ட் நிறுவனம் உட்பட மேலும் பல சிறு, பெரு நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளன.
டே கேர் மூடல்
பெங்களூரில் வேலைக்கு போகும் பெண்களுக்கு, இன்னொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு கட்டாயம் விடுமுறை விடப்பட வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதை மீறி பள்ளிகளை நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ் குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது 'டே கேர்' எனப்படும் குழந்தை பராமரிப்பு மையங்களை நடத்துவோருக்கும் பொருந்தும். எனவே, அவர்கள், 'டே கேர்களை' மூடிவிடுகிறார்கள். எனவே குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாமல் பணிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. கணவர்-மனைவி என தனிக் குடித்தனம் நடத்தும் ஐடி பெண் ஊழியர்களுக்குத்தான் இதில் பெரும் பாதிப்பு.
குழந்தைகளின் தாய்மார்களுக்கு சலுகை
பெங்களூரின், மாரத்தஹள்ளி பகுதியிலுள்ள, ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தின் பெண் ஊழியர் நம்மிடம், பெயரையும், நிறுவன பெயரையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டு பேச ஆரம்பித்தார். "டே கேர்கள் மூடப்படுவதை அறிந்ததும், ஹெச்.ஆர். சார்பில் ஒரு சலுகை தரப்பட்டுள்ளது. யாரெல்லாம் 'டே கேரை' நம்பி குழந்தைகளை விட்டுவிட்டு பணிக்கு வந்துள்ளார்களோ, அந்த பெண்கள் மட்டும், மேனேஜரிடம் கேட்டு சிறப்பு அனுமதி பெற்று வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் ஆபீஸ் வந்து வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்" என்றார். இவரும் 'டே கேர்' மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்தான்.
நிகழ்ச்சிகள் ரத்து
இன்னும் சில ஐடி நிறுவனங்களின் ஹெச்.ஆர் வட்டாரத்தில் நாம் பேசியபோது, பெரும்பாலானா ஐடி நிறுவனங்கள், WFH ஆப்ஷனை ஊழியர்களுக்கு வழங்க தீவிரமாக தயாராகி வருவதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், படிப்படியாகத்தான் இந்த ஆப்ஷன் தரப்படுகிறது. வேலையில் பாதிப்பு ஏற்படுகிறதா, இல்லையா என்பதை பார்த்துக் கொண்டு எல்லோருக்குமே வீட்டிலிருந்து வேலை பார்க்க, அனுமதியளிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். பல நிறுவனங்களும், மகளிர் தின விழா நிகழ்ச்சிகளையும், ஊழியரின்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளையும், ரத்து செய்துள்ளன என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.