ஒரு பக்கம் பணி நீக்கங்கள்.. மறுபக்கம் சில துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. ஜாப் டிரெண்ட் இதுதான்!
பெங்களூர்: கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே செல்கிறது என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், இப்போது நிலைமை மாறி வருகிறது. குறிப்பிட்ட பல துறைகளில், வேலைவாய்ப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
"இதற்கு மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு சாத்தியம் இல்லை.. இனிமேல் முன்னேற்றத்தை நோக்கிய பாதைக்கு இந்தியா உட்பட பெரும்பாலான உலக நாடுகள் திரும்ப போகின்றன" என்று மருத்துவ மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில், ஒரு பக்கம் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருவது இயல்பாகவே ஒத்திசைந்து போகக்கூடிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மே மாதம் மற்றும் ஜூன் மாதங்களில் பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டன. ஆனால் ஜூலை மாதத்தில் அந்த டிரெண்ட் மாறியுள்ளது. குறிப்பாக, சில துறைகளில் முன்பை விடவும் அதிகமாக பணியாளர்கள் நியமனம் தொடங்கியுள்ளது.
காங்கிரஸில் கலகக் குரல்-குஷ்பு மீது ஜோதிமணி கடும் பாய்ச்சல்- கட்சியை சேதப்படுத்த உரிமை கிடையாது!
ஒயிட் காலர் ஜாப்
ஆரம்பத்தில் குறைவான சம்பளம் கொண்ட ஊழியர்களுக்கான தேவை அதிகரித்தபடி இருந்தது. இப்போது ஒயிட் காலர் ஜாப் பணிகளில் இருக்ககூடியவர்களுக்கான தேவைகளும் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு ஊழியர்களை அனுமதிக்கின்றன. எனவே தங்களது தகவல்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சைபர் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு அதிகம் பேரை பணியமர்த்த ஆரம்பித்துள்ளன.
குறைந்திருந்த வேலைவாய்ப்பு
Naukri.com எனப்படும் வேலைவாய்ப்பு தொடர்பான வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்படி, கடந்த மே மாதம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் பணிகளுக்கு ஆட்கள் எடுப்பது 50 சதவீதம் அளவு குறைந்தது. கடந்த வருடம் மே மாதத்துடன் ஒப்பிடும்போது பாதிக்கு பாதி தான் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா, விமான சேவை துறைகளில் பணியாளர்களை சேர்ப்பது 91 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்திருந்தது.
ஐடி நிறுவனங்கள்
ஆனால், சமீபத்தில் அதே வெப்சைட் வெளியிட்டுள்ள தகவல்படி, ஜூன் 21-ஆம் தேதி வரை 1680 நிறுவனங்கள் சுமார் 19 ஆயிரத்து 200 பணியிடங்களுக்கு பணியாளர்கள் சேர்த்துள்ளன. பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதாக கூறப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பணியாளர் தேர்வு அதிகரித்துள்ளது. ஆக்செஞ்சர் நிறுவனம் 624 பணியிடங்களை நிரப்பி உள்ளது, ஐபிஎம் நிறுவனம் 297 பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. எம்பசிஸ் 227, டெக் மகேந்திரா மற்றும் காக்னிசன்ட் 50, எல்&டி நிறுவனத்தில், 117 பணியிடங்களுக்கான தேவை இருந்துள்ளது.
தகவல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
இன்பர்மேஷன் செக்யூரிட்டி தொடர்பான பணியிடங்களுக்கு 100% தேவை அதிகரித்துள்ளது. நெட்வொர்க் செக்யூரிட்டி பணியிடங்களுக்கு 221 சதவீதம் தேவை அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த சில வாரங்களில் இந்த தேவை மிக மிக அதிகரித்துள்ளது. ஐடி சாப்ட்வேர் பிரிவில், 9 ஆயிரத்து 700 பணியிடங்கள் காலியாக உள்ளன. பிபிஓ, பாங்கிங் மற்றும் நிதித் துறை மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த தொழில்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துள்ளன.
பெங்களூர் முன்னிலை
தொழிலாளர்களை பணிக்கு எடுப்பதில் பெங்களூர் நகரம் முதலிடத்தில் இருக்கிறது. அதன் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. ஓஎல்எக்ஸ் பணியாளர் தேர்வு ஏஜென்சியின் கருத்துப்படி, இந்த விஷயத்தில் மும்பை நகரம் மிகவும் மெதுவாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரு நகரங்கள் வரிசையில், முதலிடத்தில் பெங்களூர் நகரம் இருந்தாலும், இரண்டாவது கட்ட, மூன்றாவது கட்ட நகரங்களிலும், ஐடி நிறுவனங்கள் பணியாளர்கள் சேர்க்கையை ஆரம்பித்துள்ளன. அகமதாபாத், சோலாப்பூர், கோலாப்பூர், அவுரங்காபாத், நாசிக், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பணியாளர் சேர்க்கை அதிகமாக நடைபெறுகிறது.
டெலிவரி, செக்யூரிட்டி
பொருட்களை டெலிவரி செய்வது, செக்யூரிட்டி போன்ற பணிகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிறது புள்ளி விபரங்கள். நிதி நிறுவனங்கள் பணம் வசூல் செய்வதற்காக பணியாளர்களை அதிகம் நியமிக்க தொடங்கியுள்ளன. 12ம் வகுப்பு பாஸ் செய்து இருந்தால் போதும், அல்லது குறைந்தபட்சம் ஒரு டிகிரி பெற்றிருந்தால் போதுமானது. அடிப்படை கணிதம் மற்றும் அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கடனை செலுத்த வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கொடுத்திருந்த காலக்கெடு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், அதன் பிறகு இதுபோல நிதி வசூல் செய்வதற்கான பணியாளர்கள் தேவை அதிகம் இருக்கும் என்பது கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.
மருத்துவத் துறை
நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்த போதிலும் கூட, அனைவருமே மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சை பெறுவது கிடையாது. அறிகுறியற்ற நோயாளிகள் மற்றும் இளம் வயது நோயாளிகள் வீட்டில் இருந்தபடி தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது போன்றவர்களுக்காக டெலி மெடிசின் துறை பணி வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் வீடுகளுக்கே சென்று மருந்துகளை சப்ளை செய்வது போன்ற பணியிடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
Recommended Video
இனி வளர்ச்சிதான்
நகை கடைகள், ஜவுளிக்கடைகள் கூட இப்போதெல்லாம் வீடுகளுக்கே சென்று பொருட்களை டெலிவரி செய்கின்றன. எனவே டெலிவரி என்ற விஷயத்தில் பணிகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. இதற்கு மேலும், பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்பு கிடையாது. கொரோனா இரண்டாவது அலை அடித்தாலும் கூட பொருளாதாரம் இதற்குமேல் சரியாது என்று நிபுணர்கள் கருத்து கூறி வருவதால், இனிமேல் வளர்ச்சியான கால கட்டத்தை நோக்கி இந்தியா செல்லும். உலகின் பல நாடுகளும் இந்த திசையில் பயணிக்க போகிறது. குறிப்பாக சீன பொருட்களை தடை செய்த பிறகு, இந்தியாவில் உற்பத்திக்கான தேவை அதிகரித்துள்ளதால், வருங்காலங்களில் வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கிறார்கள் நிபுணர்கள்.