சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் விவகாரம்.. ஆய்வறிக்கையில் கூறப்பட்டது என்ன? முழு விவரம் இதோ..
பெங்களூர்: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது உண்மைதான் என ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கையில் என்னென்ன உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டதாக அப்போதைய சிறைத் துறை டிஐஜி ரூபா கண்டறிந்து புகார் கூறினார்.
மேலும் இந்த சிறப்பு வசதிகள் செய்வதற்கு கர்நாடக சிறைத் துறை ஏடிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ 2 கோடி பணம் கொடுக்கப்பட்டதாகவும் ரூபா புகார் கூறினார். இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது.
ஆய்வறிக்கை
அந்த குழுவானது சிறையில் உள்ள சசிகலா, சக கைதிகள், சிறைத் துறை அதிகாரிகள், ரூபா, சத்யநாராயணா என விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் சிறைக்கு சென்று சசிகலா அறையில் ஆய்வு செய்தனர். இதையடுத்து சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது உண்மைதான் என ஆய்வறிக்கையை அந்த குழு வெளியிட்டது.
5 அறைகள்
அந்த அறிக்கையில் சிறையில் விதிகளை மீறி சசிகலாவுக்கும் இளவரசிக்கும் 5 அறைகள் ஒதுக்கப்பட்டதால் சசிகலாவுக்கு தனியாக சமையல் செய்யப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பூனைகள்
சசிகலாவின் அறையில் பூனைகள் நுழையாமல் இருப்பதற்காக திரைச்சீலைகள் போடப்பட்டதாக சிறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
வேறுபாடு
சசிகலா, இளவரசி கைப்பையுடன் வெளியே சென்று வந்த சிசிடிவி காட்சி மீதான விசாரணையில் சசிகலா பார்வையாளர்களை சந்தித்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்த நிலையில் சிறை நிர்வாகம் அளித்த நேரத்திற்கும் சிசிடிவியில் பதிவான நேரத்திற்கும் வேறுபாடு உள்ளது.
கண்டறியப்பட்டது
நீதிமன்றம் உத்தரவிட்டதாக எண்ணியே சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியதாக சிறைத் துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் சிறையில் பல முறைகேடுகள் நடப்பதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழுவில் கண்டறியப்பட்டது மட்டுமின்றி சிறைத் துறை உயர் அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.