"தவிக்கும்" சசிகலா.. 10 நாளா என்னாச்சு.. ஏன் டாக்டர்கள் பார்க்கலையா.. என்ன நடக்குது சிறைக்குள்..?
சசிகலாவுக்கு ஏன் உடனடியாக சிகிச்சை தரவில்லை
பெங்களூரு: சசிகலாவுக்கு 10 நாட்களாக சரியான சிகிச்சை தரப்படவில்லை என்று தம்பி திவாகரன் கூறியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. அப்படியானால் பத்து நாட்களாக சசிகலாவுக்கு உடம்பு சரியில்லையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
ஆனால் இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் என்னவென்றால், சசிகலா உடம்புக்கு ஆபத்து இல்லை.. அவருக்கு நல்ல சிகிச்சை தரப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதனால் மன்னார்குடி உறவுகள் மட்டுமல்லாமல் அமமுகவினரும் கவலை கொண்டுள்ளனர்... உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.
சக்தி
தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழக அரசியலில் இருப்பவர் சசிகலா. அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலே தலைகீழாக மாறிப் போய் விடும். அதற்காகத்தான் பலரும் காத்துக் கிடக்கின்றனர். இதைத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கூட சொல்லி வருகிறார். இந்த நிலையில் சசிகலாவுக்கு உடம்பு சரியில்லை என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
மூச்சுதிணறல்
உண்மையில் சசிகலாவுக்கு என்னாச்சு என்று தெரியவில்லை... கொரோனா இல்லை என்று சொல்லி விட்டார்கள்.. இருந்தாலும் ஆக்சிஜன் லெவல் குறைந்திருப்பது ஏன்? அவருக்கு மூச்சு திணறல் வருவது ஏன்.. ஐசியூவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நிலைமை போயிருப்பது ஏன்.. ரொம்ப நாளாகவே அவருக்கு உடம்பு சரியில்லையா.. இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
உபாதைகள்
சசிகலாவுக்கு வேறு உடல் உபாதைகள் ஏதாவது இருக்கிறதா? அவருக்கு பிரஷர் இருக்கிறதா அல்லது பிரஷர் அதிகரிக்கும் அளவுக்கு ஏதாவது சம்பவம் நடந்து விட்டதா? என்பன போன்ற பல கேள்விகளும் கூடவே எழுகின்றன. தன்னை சுற்றி பெரிய பஞ்சாயத்தே ஓடிக் கொண்டிருப்பது சசிகலாவுக்குத் தெரியுமா? ஒருவேளை அது தெரிந்துதான் அவருக்கு மன அழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்து விட்டதாக என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன.
ஆர்வம்
எது எப்படியோ சசிகலா திரும்பி வர வேண்டும், அதுவும் பழைய வைராக்கியத்துடன் வர வேண்டும், ஆரோக்கியமாக திரும்ப வேண்டும் என்று மன்னார்குடி உறவுகள் ஆர்வத்துடன் காத்துள்ளன. ஒரு பக்கம் கமலா ஹாரிஸால் மன்னார்குடி வட்டாரமே நேற்று பரவசமாக காணப்பட்டது. ஆனால் அதே மண்ணின் மகளான சசிகலாவுக்கு மூச்சுத் திணறல் என்று கேள்விப்பட்டதும் மன்னார்குடி மக்கள் சற்றே பதட்டமாகி விட்டது உண்மைதான்.